343
மீனொடுத்து நெற்குவைஇ
மிசையம்பியின் மனைமறுக்குந்து
மனைக்குவைஇய கறிமூடையாற்
கலிச்சும்மைய கரைகலக்குறுந்து
5கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியாற் கரைசேர்க்குந்து
மலைத்தாரமுங் கடற்றாரமும்
தலைப்பெய்து வருநர்க்கீயும்
புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
10முழங்குகடன் முழவின் முசுறி யன்ன
நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும்
புரைய ரல்லோர் வரையல ளிவளெனத்
தந்தையுங் கொடாஅ னாயின் வந்தோர்
வாய்ப்பட விறுத்த வேணி யாயிடை
15வருந்தின்று கொல்லோ தானே பருந்துயிர்த்
திடைமதிற் சேக்கும் புரிசைப்
படைமயங் காரிடை நெடுந லூரே.

(பி - ம்.) 3 ‘மனைமறுக்குவைஇய’ 4 ‘சும்மையககுறுந்து’, ‘சும்மையக்குந்து’ 10 ‘முழங்கடன்’, ‘முசிறி’, 12 ‘வரையலனி வனலனே’ 15 ‘கொல்லெதானே’

திணையும் துறையும் அவை.

பரணர்.


(கு - ரை.) 1. நொடுத்து - விற்று ; "வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள், வராஅல் சொரிந்த வட்டியுண் மனையோள், யாண்டுகழி வெண்ணெ னிறைக்கு மூர", "அஞ்சி லோதி யசைநடைப் பாண்மகள், சின்மீன் சொரிந்து பன்னெற் பெறூஉம்" (ஐங்குறு.48, 49)

‘நொடை - விலை ; மீனொடுத்து நெற்குவைஇ யென்றார் புறப்பாட்டினும்’(சிலப். 5 : 24, அடியார்.)

2. அம்பி - தோணி. மறுக்குந்து - மறுகச்செய்யும்.

3. கறிமூடை - மிளகுபொதி ; "பொதிமூடைப் போரேறி" (பட்டினப்.137)

4. கலிச்சும்மைய - மிக்க முழக்கத்தையுடைய. கலக்குறுந்து - கலக்கும்.

5. கலம் - கப்பல். பொன்பரிசத்தை.

6. தோணி - ஓடம். சேர்க்குந்து - சேர்க்கும்.

7. தாரம் - பலபண்டம்.

8. தலைப்பெய்து - கலந்து.

9. புனலங்கள்ளென்றது கள்ளின் மிகுதிபற்றி. குட்டுவன் - குட்டநாட்டையுடையவன் ; "போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ" (பதிற். 23 : 9)

‘பொன்’ என்பது ‘பொலம்’ என்று செய்யுட்கண் வருமென்பதற்குப் பொலந்தார்க் குட்டு்வனென்பது மேற்கோள் ; தொல்.புள்ளி. சூ. 61, ந.

10. முசுறி : சேரநாட்டிலுள்ளதோர் ஊர்.

9 - 10. கள்ளினையுடைய முசுறி.

12. புரையர் - ஒத்தவர். வரையலள் - மணஞ்செய்யப்படாள் ; "நிரலல் லோர்க்குத் தரலோ வில்லென" (புறநா.345 ; 14)

14. வாய்ப்பட - வழிப்பட. ஏணி - மதிலிற் சார்த்தி ஏறுதற்குரியது ; எல்லையுமாம்.

15 - 6. பருந்து உயிர்த்து இடைமதில் சேக்கும் - பருந்துகள் இடைமதிலில் தங்கி இளைப்பாறும் ; "பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறை" "பருந்திருந் துகக்கும் பன்மா ணல்லில்" (மதுரைக். 231, 502)

17. "எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்" (புறநா. 178 ; 7) ; "மயங்கமர் மாறட்டு மண்வௌவி வருபவர்" (கலித். 31 ; 9)

(343)