திணையும் துறையும் அவை. கடியநெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச்சாத்தனார் பாடியது. (இ - ள்.) நிறைந்த செல்வத்தையுடைய மூவேந்தராயினும் எம்மைப் பேணுதலின்றி ஈதலை யாங்கள் விரும்பேம்; வென்றியான் உளதாகிய சினம் தீர்ந்த விரைந்த செலவையுடைத்தாகிய குதிரையையுடைய அஞ்சி வந்தடைந்த பகைவர்க்குச் செல்லும் புகலிடமாய் அவ்வாறன்றிப் போர் செய்யும் பகைவருடைய முயற்சியையுடைய கிளர்ந்த உள்ளத்தைக் கெடுத்த வாட்போரின் மிக்க படையினையுடைய வெள்ளிய பூவையுடைத்தாகிய முல்லைவேலியையுடைய (புறநா. 144 : 14) கோடையென்னும் மலைக்குத் தலைவ! சிறியனவும் பெரியனவுமாகிய புழைகளைப் போக்கற விலக்கிய மானினது திரட்சியைத் தொலைத்த கடிய செலவையுடைய சினமிக்க நாயையும் வலியவில்லையுமுடைய வேட்டுவ! நீ நோயின்றி இருப்பாயாக; இடியினது மிக்க ஓசையையுடைய புதுப்பெயலைத் தரவேண்டிக் கால்வீழ்த்துக் கடலிடத்தே திரண்ட தலைமையையுடைய முகில் நீரின்றி மீளாதவாறுபோலத் தேருடன் விளங்கிய கோடுயர்ந்த தலைமையையுடைய களிற்றையின்றி மீளா, பரிசிலரது சுற்றம்-எ - று. புரவியையுடைய விறற்சினந் தணிந்த உறுவரென இயையும். செல்சார்வாகித் தாளுளந்தபுத்த பொருநவென இயையும். புழைகெட விலங்கிய நாயென இயையும். வெள்வீயென்றது அதனையுடைய முல்லையை. மூவராயினுமென்ற உம்மை சிறப்பும்மை. கோடைப்பொருந! வேட்டுவ! பெட்பின்றீதல் யாம் வேண்டலம்; பரிசிலர் கடும்பு களிறின்று பெயரல; நீ நோயிலையாகுகவெனக் கூட்டுக. யான் களிறின்றிப் பெயராநின்றேனென்பது கருத்தாகலின், நோயிலையாகுகவென்பது இகழ்ச்சிக்குறிப்பு. ‘புழைகெட விலங்கி’ என்பதூஉம் பாடம். |