390
அறவை நெஞ்சத் தாயர் வளரும்
மறவை நெஞ்சத் தாயி வாளர்
அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ்
............................மன்னமுற்றத்
5தார்வலர் குறுகி னல்லது காவலர்
கனவினுங் குறுகாக் கடியுடை வியனகர்
மலைக்கணத் தன்ன மாடஞ் சிலம்பவென்
அரிக்குரற் றடாரி யிரிய வொற்றிப்
பாடி நின்ற பன்னா ளன்றியும்
10சென்ற ஞான்றைச் சென்றுபட ரிரவின்
வந்ததற் கொண்டு நெடுங்கடை நின்ற
புன்றலைப் பொருந னளியன் றானெனத்
தன்னுழைக் குறுகல் வேண்டி யென்னரை
முதுநீர்ப் பாசி யன்ன வுடைகளைந்து
15திருமல ரன்ன புதுமடிக் கொளீஇ
மகிழ்தரன் மரபின் மட்டே யன்றியும்
அமிழ்தன மரபி னூன்றுவை யடிசில்
வெள்ளி வெண்கலத் தூட்ட லன்றி
முன்னூர்ப் பொதியிற் சேர்ந்த மென்னடை
20இரும்பே ரொக்கல் பெரும்புலம் பகற்ற
அகடுநனை வேங்கை வீகண் டன்ன
பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக்
கொண்டி பெறுகென் றோனே யுண்டுறை
மலையல ரணியுந் தலைநீர் நாடன்
25கண்டாற் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி
........................................................
வானறி யலவென் பாடுபசி போக்கல்
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ வறியல் காண்பறி யலரே.

(பி - ம்.) 2 ‘தாயிவிளா’ 3 ‘செநதிநெடுநகாமலாகமழு’ 6 ‘தாவலர்’ 7 ‘மழைககளத’ 8 ‘பனனாளறையும்’ 14 ‘வுடைகளைநததிரும வானனன’ 17 ‘அமிரதானமரபின’ 20 ‘பொருமபுகறறத்தடுஙகண் வேங்கை’ 21 ‘தகடுகனை வேங்கை’ 22 ‘படுதருசெநநெற்’ 25 ‘கணடாராககொணடுமவனறிருநதடி’

திணையும் துறையும் அவை.

அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார்.


(கு - ரை.) 1. அறவைநெஞ்சம் - அறத்தையுடைய நெஞ்சம் ; “அறவை யாய ரகன்றெரு வடைந்தன” (சிலப். 22 : 116) ; ‘அறவை நெஞ்சத்தாயர்’ என்பதை, “ஆகாத் தோம்பி யாப்பய னளிக்கும், கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை” (சிலப்.15 : 120 - 21) என்பது விளக்குகின்றது.

1 - 2. புறநா. 44 : 11 - 3. செருந்தி - ஒரு பூமரம்.

5. ஆர்வலர் - பரிசிலர். காவலர் - அரசர். 6. கடி - காவல்.

5 - 6. “புலிதுஞ்சு வியன்புலத் தற்றே, வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே” (புறநா. 54 : 13 - 4)

7. சிலம்ப - முழங்க ; முழக்கம் : இங்கே எதிரொலி.

10. சென்றஞான்று - முதல்நாள்.

12. அளியன் - அளிக்கத்தக்கான்.

14. “ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி, வேர்புரை சிதாஅர் நீக்கி” (புறநா. 392 : 13 - 4) ; “பாசி வேரின் மாசொடு குறைந்த, துன்னற் சிதாஅர் நீக்கி” (பொருந. 153 - 4) ; “பாசி யன்ன சிதர்வை நீக்கி” (பெரும்பாண். 468)

15. மலரென்றது பகன்றைப்பூவை ; புறநா. 393 : 17 - 8, குறிப்புரை.

17. துவை - துவையல்.

18. வெள்ளிக்கலம் : பெரும்பாண்.477 - 80, ந.

19. முன்னூர் - ஊர்முன். பொதியில் - அம்பலம்.

20. “இரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினும்” (புறநா. 394 ; 16)

21. அகடுநனை - உள்ளிடம் நனைந்த. வேங்கைவீ - வேங்கை மரத்துப்பூ.

22. பகடுதரு செந்நெல் - எருது முதலியவைகள் உழுதுண்டாக்கிய செவ்விய நெல் ; “பகடுதருபெருவளம் வாழ்த்தி” (புறநா. 391 ; 4) ; “பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க” (நாலடி. 2)

21 - 2. மலைபடு. 434 - 5.

23. கொண்டி - பொருளின் மிகுதி ; புறநா. 382 : 1.

27. வான் - மேகம்.

(390)