| 75. சோழன் நலங்கிள்ளி சோழன் நலங்கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங் கிள்ளியிடமிருந்து உறையூரைத் தான் பெற்றுத் தான் அங்கே இருந்து அரசு புரிந்து வந்தான். வருகையில், ஒரு நாள் சான்றோர் சூழ விருக்கையில், அரசு முறையின் இயல்புபற்றிப் பேச்சுண்டாயிற்று. மலர்தலை யுலகம் மன்னனை உயிராகக் கொண்டிருத்தலை யுணர்ந்து அதற் கூறுண்டாகா வண்ணம் காத்தற்கண் வரும் இடுக்கண் பலவற்றையும் நோக்க, அரசு முறை யென்பது எளிதன்று என்பவர் பலராயினர். அக்காலை நலங்கிள்ளி, அரசு முறை மூத்தோர்க்குப் பின் அவர் வழிவரும் இளையோர் பால் முறைப்படி வரும் தாயமுறையினை யுடைத்து. அதனை யெய்தினோன் இவ்வுலகிற் பெருஞ் சிறப்பெய்தி விட்டதாகக் கருதி அளவிறந்த இறையினை விதித்துக் குடிகளை யிரந்து பொருளீட்டக் கருதினானாயின், அவற்கு அரசுமுறை பொறுத்தற் கரிய சுமையாய்ச் சிறப்புடைத்தன்றாம்; வலியுடைய விழுமியோன் பெறுகுவனாயின், அவற்கு உலர்ந்த நெட்டித் தக்கை போல நொய்தாம் என்றான். இங்ஙனம் சீரிய கருத்தமைந்த சொல்லை அவன் இப் பாட்டு வடிவில் தந்துள்ளான்.
| மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப் பாறர வந்த பழவிறற் றாயம் எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பெனக் குடிபுர விரக்குங் கூரி லாண்மைச் | 5 | சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள் விழுமியோன் பெறுகுவ னாயி னாழ்நீர் அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் | 10 | நொய்தா லம்ம தானே மையற்று விசும்புற வோங்கிய வெண்குடை முரசுகெழு வேந்த ரரசுகெழு திருவே. (75) |
திணை: அது. துறை: பொதுமொழிக்காஞ்சி. சோழன் நலங்கிள்ளி பாட்டு.
உரை: மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்தென - தம் குடியில் முதியோரைக் கூற்றம் கொண்டு போயிற்றாக; பால் தர வந்த பழ விறல் தாயம் - விதி தரப்பட்டுத் தம்பால் வந்த பழைய வெற்றியாலுண்டாகிய அரசுரிமையை; எய்தின மாயின் - பெற்றே மானால்; சிறப்பு எய்தின மென - இத் தலைமையைப் பெற்றே மெனக் கொண்டு; குடி புரவு இரக்கும் - தம் குடி மக்களை இறைவேண்டி யிரக்கும்; கூரில் ஆண்மைச் சிறியோன் பெறின் - மிகுதியில்லாத ஆண்மையையுடைய
|