134. வேள் ஆய் அண்டிரன்

     “உலகத்துச் செல்வர் பலரும் தம்பால் உள்ள செல்வத்தைப்
பரிசிலர்க்கு வழங்குவது இம்மையிற் புகழும் மறுமையிற் றுறக்க வின்பமும்
குறித்தேயாகும்; ஆகவே, இப்பயன்கருதிக் கொடைவழங்கும் அவர்கள்,
பொருள் கொடுத்து மறுமை யின்பம் கோடலின், ஓராற்றால் அறவிலை
வணிகரே யாகும்; அவர் தொகையுள் ஆய் அண்டிரனும் அமைவன்
போலும்” எனச் சான்றோரிடையே ஒருகால் பேச்சு நிகழ்ந்ததாக,
ஏணிச்சேரி முடமோசியார், “ஆய் அத்தகைய னல்லன்; இல்லார்க்கு
வேண்டுவன நல்கி அவரையும் தம்மைப்போல உலகியலில் நுகர்வன
நுகர்வித்தல் உடையோர்க்குக் கடனாம் என்னும் சால்பு சான்றோர்க்குரியது;
அதனையே சான்றோரும் தக்கதென நிகழ்வது ஆய் அண்டிரனது கொடை”
என இப்பாட்டின்கண் அச் சான்றோர்க்கு வற்புறுத்தியுள்ளார்.

இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிக னாயலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன் றவன்கைவண் மையே.
(134)

     திணை : அது. துறை : இயன்மொழி. அவனை அவர் பாடியது.

     உரை : இம்மைச் செய்தது - இப் பிறப்பின்கட் செய்த தொன்று;
மறுமைக்காம் - மறுபிறப்பிற் குதவும்; எனும் அறவிலை வணிகன்
ஆய் அலன் - என்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து
அதற்கு அறங்கொள்ளும் வணிகன் ஆய் அல்லன்; சான்றோர் பிறரும்
சென்ற நெறி என - அமைந்தோர் பிறரும் போயவழி யென்று
உலகத்தார் கருத; ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மை - அந்த
நற்செய்கையிலே பட்டது அவனது கைவண்ணம் எ-று.

     அன்றி, ஆய் அறவிலை வணிகன் அல்லன்; பிறரும் சான்றோர்
சென்ற நெறி யெனக் கருதி அச் செய்கையிலே பட்டதன்று அவன்
கைவண்மை யென்றுரைப்பாரு முளர். இதற்குப் பட்டன்றென்பது
மறைப்பொருள் படாமையின், பட்டதன்றென்பது பட்டன்றென விகாரமாகக்
கொள்க.

     விளக்கம் : மறுமைப் பயன் அறப்பயனாதலின், இம்மையில்
நலம்செய்து மறுமையில் இன்பம் கருதுவோரை “அறவிலை வணிகர்”
என்றார். அமைந்தோர், நற்பண்புகளால் நிறைந்தவர். என என்பதற்கு
என்று கருத வென்றுரைத்தவர் கருதுதலைச் செய்தற்குரியவர் இவரென்பார்
“உலகத்தார்” என்றார். பட்டன்று, பட்டது; “அணிந்தன்று” என்றாற்போல.
பிறர் கூறுமாறு உரை கொள்வதாயின், பட்ட தன்றென்பது பட்டன்றென
நின்றதென வுரைத்தல் வேண்டும்; இன்றேல், பட்டன்றென்பது எதிர்மறைப்
பொருள் தாராது என அறிக.


     * இவ்வழக்கு கீழ்மக்களிடையே இந்நாளில் இக்கருத்தே
தோன்ற இடக்கர் வாய்பாட்டில் வழங்குகிறது.