162. இளவெளிமான் வெளிமான் என்பான் ஒரு கொடை வள்ளல்; தன்பால் வரும் பரிசிலர் வரிசை யறிந்து வேண்டுவன நல்கும் வீறுடையவன். ஒருகால், வறுமைத் துயரால் வாட்டமுற்ற பெருஞ்சித்திரனார் இவ் வெளிமான்பால் சென்றார். இவர்க்கு வேண்டுவன நல்க விழைந்தானாயினும், தான் துஞ்சும் நிலையில் இருந்தமையின், தன் தம்பியாகிய இளவெளிமானை யழைத்து இவர்க்கு வேண்டுவன நல்குகஎன்றான். இளவெளிமான் வெளிமானைப்போல அத்துணை விரிந்த மனப்பண்பும், புலவர் வரிசையறியும் நல்லறிவும் உடையவ னல்லன். அதனால் அவன் வெளிமான் குறித்த அளவில் மிகவும் குறைத்துக் கொடுத்தான். அதனை ஏற்றற்குப் பெருஞ்சித்திரனார் விரும்பிற்றிலர். அவர் கொல்களிறு பெறினும் தவிர்ந்து விடு பரிசிலர் கொள்வ திலர்; உவந்து இன்புற விடுப்பின் குன்றியும் கொள்ளும் இயல்பினர். அதனால் அவர் இளவெளிமான் தந்ததை ஏலாது பாடிய பாட்டு எழுவினி (புறம்.207) எனத் தொடங்கும் புறப்பாட்டு. பெரிதே யுலகம் பேணுநர் பலரேஎனக் குமணன் பால் சென்று பகடு பெற்று அதன்மேல் ஏறிச் செம்மாந்துபோந்தார். போந்தவர் நேரே தம்மூர்க்குச் செல்லாது வெளிமானூர்க்கு வந்தார். அப் பகட்டினை வெளிமானூர்க் காவல் மரத்திற் கட்டிவிட்டு நேரே சென்று இளவெளிமானைக் கண்டார். வேந்தர் நாணப் பெயர்வேன்என்று குமணன்பால் கூறிப் போந்தவாறே இவ் விளவெளிமான் நாணுமாறு நீ இரவலர் பலரையும் புரப்பவன் அல்லை; இரவலரைப் புரப்பார் இல்லாமலும் இல்லை. இரவலர் உண்மையும், புரவலர் உண்மையும் என்னையும் வள்ளல் குமணனையும் பார்த்து அறிந்துகொள்க. குமணன் எனக்குத் தந்த யானைப் பரிசிலைக் காண்பாயாக; அவ் யானையை நின் ஊர்க் கடிமரத்திற் பிணித்துள்ளேன்என்று இப் பாட்டாற் கூறிக் காட்டுகின்றார். | இரவலர் புரவலை நீயு மல்லை புரவல ரிரவலர்க் கில்லையு மல்லர் இரவல ருண்மையுங் காணினி யிரவலர்க் கீவோ ருண்மையுங் காணினி நின்னூர்க் | 5 | கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த நெடுநல் யானையெம் பரிசில் கடுமான் றோன்றல் செல்வம் யானே. (162) |
திணை: அது. துறை: பரிசில் விடை. அவர் வெளிமானுழைச் சென்றார்க்கு வெளிமான் துஞ்சுவான் தம்பியைப் பரிசில் கொடுவென, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய்க் குமணனைப் பாடிக் குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று வெளிமானூர்க் கடிமரத்து யாத்துச் சென்று அவர் சொல்லியது.
உரை: இரவலர் புரவலை நீயும் அல்லை - இரப்போர்க்கு ஈந்து பாதுகாப்பாய் நீயு மல்லை; புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் - புரப்போர் இரப்போர்க்கு இல்லையுமல்லர்; இனி இரவலர் உண்மையுங் காண் - இனி இரப்போருண்டாதலையும் காண்பாயாக; இனி இரவலர்க்கு ஈவோ ருண்மையும் காண் - இனி இரப்போர்க்கு இடுவோ ருண்டாதலையும் காண்பாயாக; நின் ஊர்க் கடிமரம் வருந்தத் தந்து - நின்னுடைய ஊரின்கண் காவலையுடைய மரம் வருந்தக் கொடுவந்து; யாம் பிணித்த நெடு நல்யானை எம் பரிசில் - யாம் கட்டிய உயர்ந்த நல்ல இலக்கணமுடைய யானை எமது பரிசில்; கடு மான் தோன்றல் - விரைந்த செலவினையுடைய குதிரையையுடைய தலைவனே; யான் செல்வல் - இனி யான் போவல் எ-று.
யான் போவல் என்ற கருத்து, முன் சிறிது கொடுப்பக் கொள்ளாத மிகுதி தோன்ற நின்றது. இரவல ருண்மையுங் காணினி யென்ற கருத்து, இரப்போர்க்குப் பெருந்தன்மை யுளதாதல் என்னளவிலே காண் என்பதாம். யாம் பிணித்தஎன்னும் பன்மை பெருமிதந்தோன்ற நின்றது. நடைவயிற் றோன்றும் இருவகை விடையும்(தொல். புறத்.36) என்பதனால் இது பெறாது பெயர்ந்த பரிசில் விடை.
விளக்கம்: இளவெளிமான் சிறிது கொடுத்தது, இரப்பவர் என்பெறினும் கொள்வரென்றும், சிறிது கொடுப்பினும் கொடாது மறுப்பினும் தன்னையே மீளப் போந்தடைவர் என்றும் கருதிய கருத்தைப் புலப்படுத்தினமையின், இரவலர் புரவலை நீயு மல்லையென்றும், புரவலர் இரவலர்க் கில்லையு மல்லர் என்றும் கூறினார். குமணன் தந்த யானைப் பரிசிலை வெளிமானூர்க்கடிமரத்திற் பிணித்திருத்தலின், நின்னூர்க் கடிமரம வருந்தத் தந்து யாம் பிணித்த நெடுநல் யானையென்றும், இதுபோலும பெருஞ் செல்வத்தை நல்கும் புரவலரும், பெறும் என்போலும் இரவலரும் உளரெனக் காட்டுவதே கருத்தாகலின், யான் செல்வல் என்றும் பெருமிதம் படக் கூறினார். |