44. சோழன் நெடுங்கிள்ளி

     இவன், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி யெனவும் வழங்கப் படுவன்;
திருந்திய அரசியற் பயிற்சி இல்லாதவன். இவற்கும் சோழன் நலங்கிள்ளிக்கும்
எவ்வகையாலோ பகைமை யுண்டாயிற்று. அக் காலத்தே சோழன்
நலங்கிள்ளியிடமிருந்து இளந்தத்த னென்னும் புலவ னொருவன் வந்து பரிசில்
வேண்டினாராக, அவரைச் சோழன் நலங்கிள்ளியின் ஒற்ற னெனத் தவறாகக்
கருதிக் கொலைபுரிய முற்பட்டான். அதனை யுணர்ந்த ஆசிரியர் கோவூர்
கிழார், இவ் வேந்தனுக்குத் தகுவன கூறி அப் புலவனை யுய்வித்தார். பின்பு.
இவன் ஆவூர் சென்றிருக்கையில், ஆவூர் தனக்குரிய தாதலால், அதனைத்
தான் பெறுதற்காகச் சோழன் நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்டான். இவன்
அஞ்சிப் போர்க்கு எழானாக, கோவூர் கிழார் தமது பாட்டால் இவற்கு மறத் தீ
யெழுவித்துப் போர் செய்யத் தூண்டினார். அப் போரில் உய்ந்தோடிய இவன்
உறையூரிடத்தே இருந்தான். உறையூர் இவற்குரியதே; நலங்கிள்ளி
உறையூரையும் முற்றுகையிட்டான். ஆங்கும் இவன் அடைபட்டுக் கிடந்தான்
அக்காலத்தும் ஆசிரியர் கோவூர் கிழாரே சென்று இருவரையும் சந்து செய்து
போர் செய்யாவாறு தடுத்து நலஞ்செய்தார். முடிவில் இவன் காரியாறு
என்னுமிடத்தே போரிற் பட்டு இறந்தான். அதனால் இவற்குக் காரியாற்றுத்
துஞ்சிய நெடுங்கிள்ளி யென்று பெயரெய்துவதாயிற்று.

     இப்பாட்டின்கண், முற்றுகைக்கஞ்சி அடைபட்டிருந்த நெடுங்கிள்ளியை
நோக்கி, ஆசிரியர் கோவூர் கிழார், “தோன்றால், யானைகள் வெய்துயிர்த்து
உருமென முழங்குகின்றன; குழவிகள் பாலின்றி அலறியழுகின்றன; மகளிர்
வறுந்தலை முடிக்கின்றனர்; மனையிடங்களில் எழும் அழுகுரல் நின்
அரண்மனைக்கண் கேட்கிறது; இவை நிகழவும் நீ அரண்மனைக்கண்
அடங்கிக் கிடத்தல் இனிதன்று; முன்னே வந்து, முற்றுகை யிட்டிருக்கும்
வேந்தனைப் பார்த்து ஈயும் அறவுணர்வால் “இது நினக்கு வேண்டின் பெற்றுக்
கொள்ளெனச் சொல்லி எயிற்கதவைத் திறத்தல் வேண்டும்; எதிரூன்றிக்
காத்தலே மறம் என்பது கருத்தாயின், போர் குறித்துத் திறந்துவிடல் வேண்டும்.
அறவையும் மறவையு மல்லையாய் மதிற் கதவைத் திறவாது ஒருபுறத்
தொடுங்கியிருப்பது நாணத் தகுவதொன்று“ என்று கூறுகின்றார்.

 இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த வொற்றி
நிலமிசைப் புரளுங் கைய வெய்துயிர்த்
5தலமரல் யானை யுருமென முழங்கவும்
பாலில் குழவி யலறவு மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவு நீரில்
வினைபுனை நல்லி லினைகூஉக் கேட்பவும்
இன்னா தம்ம வீங்கினி திருத்தல்
10துன்னருந் துப்பின் வயமான் றோன்றல்
அறவை யாயி னினதெனத் திறத்தல்
மறவை யாயிற் போரொடு திறத்தல்
அறவையு மறவையு மல்லை யாகத்
திறவா தடைத்த திண்ணிலைக் கதவின்
15. நீண்மதி லொருசிறை யொடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே. (44)

     திணையும் துறையும் அவை. அவன் ஆவூர் முற்றியிருந்த
காலத்து அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

     உரை: இரும் பிடித் தொழுதியொடு - கரிய பிடியினது
ஈட்டத்தோடு; பெருங் கயம் படியா - பெரிய கயத்தின்கட்
படியாவாய்; நெல்லுடைக் கவளமொடு நெய் மிதி பெறாஅ -
நெல்லையுடைய கவளத்துடனே நெய்யால் மிதித்துத் திரட்டப்பட்ட
கவளமும் பெறாவாய்; திருந்தரை நோன் வெளில் வருந்த ஒற்றி -
திருந்திய மருங்கையுடைய வலிய கம்பம் வருந்தச் சாய்த்து;
நிலமிசைப் புரளும் கைய - நிலத்தின் மேலே புரளும் கையை
யுடையவாய்; வெய் துயிர்த்து அலமரல் யானை - வெய்தாக
வுயிர்த்துச் சுழலும் யானை; உரு மென முழங்கவும் - உருமேறு போல
முழங்கவும்; பாலில் குழவி அலறவும் - பாலில்லாத குழவி அழவும்;
மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும் - மகளிர் பூவில்லாத வறிய
தலையை முடிப்பவும்; நீரில் வினைபுனை நல்லில் இனை கூஉக்
கேட்பவும் - நீரில்லாத தொழில் புனைந்த நல்ல மனையிடத்துள்ளார்
வருந்திக் கூப்பிடும் கூப்பீட்டைக் கேட்கவும்; ஈங்கு இனிதிருத்தல்
இன்னாது - இவற்றிற்கு நாணாது இவ்விடத்து நீ இனிதாக இருத்தல்
இன்னாது; துன்னரும் துப்பின் வயமான் தோன்றல் - நண்ணுதற்கரிய
வலிமையுடைய வலிய குதிரையையுடைய தோன்றால்; அறவை யாயின்
நினது எனத் திறத்தல் - அறத்தையுடையையாயின் இது நினதன்றோ
வென்று சொல்லித் திறத்தல் செய்வாயாக; மறவை யாயின் போரொடு
திறத்தல் - மறத்தை யுடையை யாயின் போரால் திறத்தல்
செய்வாயாக; அறவையும் மறவையும் அல்லையாக - அவ்வாறன்றி
அறத்தையும் மறத்தையும் உடையை யல்லையாக; திறவாது அடைத்த
திண்ணிலைக் கதவின் - திறவாது அடைக்கப்பட்ட திண்ணிய
நிலையை யுடைத்தாகிய கதவினையுடைய; நீண் மதில் ஒரு சிறை
ஒடுங்குதல் - நீண்ட மதிலுள் ஒரு பக்கத்தே ஒதுங்குதல்; நாணுத் தக
வுடைத்து - நாணுந் தன்மையை யுடைத்து; இது காணுங் கால் - இஃது
ஆராயுங்காலத்து எ-று.

     செய் யென வொருசொல் வருவித்துரைக்கப்பட்டது; திறத்த
லென்பதனை இது திறக்க வியங்கோளீறாக வுரைப்பினு மமையும். அம்ம,
கேட்பித்தற்கண் வந்தது. அறவியு மறவியு மல்லையாயின் என்று
பாடமோதுவாரு முளர். படியா பெறா வென்பன எதிர்மறை வினை
யெச்சமுற்று. கைய வென்பது வினையெச்ச வினைக்குறிப்பு முற்று.

     விளக்கம்: பெருங்கயம்: பெருமை, யானைகள் படிதற்குரிய தகுதி
சுற்றிச் சுற்றி வரும் யானையை அலமரல் யானை யென்றார். நீர் இல்வினை
- நன்னீர்மை யில்லாத தொழில் திறத்தல் என்பதற்குத் திறத்தலைச்
செய்வாயாக என்று உரைக்கின்றாராதலால், “செய்யென வொருசொல்
வருவித்துரைக்கப்பட்டது” என்றார். வினையெச்ச வினைக்குறிப்பு முற்று
என்பது குறிப்பு முற்றெச்சம்.