45. சோழன் நெடுங்கிள்ளியும் நலங்கிள்ளியும்

     சோழன் நெடுங்கிள்ளி ஆவூரினின்றும் தப்பிப் போந்து தனக்குரிய
உறையூரில் இருக்கையில், அதனை யறிந்த நலங்கிள்ளி போந்து உறையூரை
முற்றுகையிட்டான். சோழர் குடிக் குரியராகிய இருவர் தம்முள்
பகைகொண்டு மாறி மாறிப் போருடற்றித் திரிதல் நன்றன் றென்பதை யறிந்த
கோவூர் கிழார் இப்பாட்டின்கண் இருவரையும் சந்து செய்விக்கின்றார்.

இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன்
கருஞ்சினை வேம்பின் றெரியலோ னல்லன்
நின்ன கண்ணியு மார்மிடைந் தன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியு மார்மிடைந் தன்றே
5 ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே
இருவீர் வேற லியற்கையு மன்றே, அதனாற்
குடிப்பொரு ளன்றுநுஞ் செய்தி கொடித்தேர்
நும்மோ ரன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே. (45)

     திணை: வஞ்சி. துறை: துணைவஞ்சி சோழன் நலங்கிள்ளி
உறையூர் முற்றியிருந்தானையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும்
கோவூர் கிழார் பாடியது.

     உரை: இரும் பனை வெண்டோடு மலைந்தோன் அல்லன் -
பெரிய பனையினது வெளிய தோட்டைச் சூடினோ னல்லன்; கருஞ்
சினை வேம்பின் தெரியலோன் அல்லன் - கரிய கோட்டினையுடைய
வேம்பினது தாரையுடையோ னல்லன்; நின்ன கண்ணியும் ஆர்மிடைந்
தன்று - நின்னுடைய கண்ணியும் ஆத்தியால் செறியக் கட்டப்பட்டது;
நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்று - நின்னுடன்
பொருவானுடைய  கண்ணியும்  ஆத்தியாற்  செறியக்
கட்டப்பட்டது; ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே -
ஆதலால் நும்முள் ஒருவீர் தோற்பினும் தோற்பது நுங் குடி யன்றோ;
இருவீர் வேறல் இயற்கையு மன்று - இருவீரும் வெல்லுதல்
இயல்புமன்று; அதனால் - ஆதலால்; குடிப் பொருள் அன்று நும்
செய்தி - நும் குடிக்குத்தக்க தொன்றன்று நுமதுசெய்கை; கொடித்
தேர் நும்மோ ரன்ன வேந்தர்க்கு - கொடியாற் பொலிந்த
தேரையுடைய நும்மைப் போலும் வேந்தர்க்கு; மெய்ம் மலிஉவகை
செய்யும் இவ்விகல் - உடம்பு பூரிக்கும் உவகையைச் செய்யும் இம்
மாறுபாடு; ஆதலான் இது தவிர்தலே நுமக்குத் தக்கது எ-று.

     நின கண்ணியு மென்பது, நின்ன கண்ணியு மென விகாரமாயிற்று.
அதனா லென்பதனை யொழித்தும் பாட மோதுப. இது சந்து செய்தலால்
துணைவஞ்சி யாயிற்று.

     விளக்கம்: சேரர் குடியிற் பிறந்தவ னல்லன் என்பதற்குப் “பனை
வெண்டோடு மலைந்தோ னல்லன்” என்றார். வேம்பின் தாரையுடையவன்
பாண்டியன். வெல்லுதல் வேறல் என வந்தது; செல்லுதல் சேறல் என
வருதல் போல, ஒரு குடிக்குப் பொருளாவது அதன் தகுதியாதலால்,
பொருளன் றென்றதற்குத் தக்க தொன்றன்றென வுரை கூறப்பட்டது.
மெய்ம்மலி யுவமை உடம்பி பூரிப்பதற் கேதுவாகிய உவகை. நும்மோ ரன்ன
வேந்தர் - சேர பாண்டியர்.