68. சோழன் நலங்கிள்ளி

     சோழன் நலங்கிள்ளி உறையூரின்கண் இருக்கையில், கோவூர் கிழார்
சென்று அவனைக் கண்டார். அவன் உயர்ந்த பூண்களை யணிந்து மகளிர்
பால் மென்மையுடையனாய் இனி திருப்பதும், அவன் மெய்-வன்மையால்
வீரராகிய ஆடவர் அவனைப் பணிந் தொழுகுவதும், சோழ நாட்டு
மன்பதைகட்குத் தான் உயிரெனக் கருதிப் பேணுவதும், அவனுடைய மறம்
நீங்கா வீரர் போர்த்தினவு கொண்டு செம்மாப்பதும் நேரிற் கண்டு வியந்தார்.
சோழனும் அவர்க்கு மிக்க பொருளைப் பரிசிலாக வழங்கினான். இச்
செய்தியை இவர் இப்பாட்டின்கண் பாண னொருவதற்குக் கூறும் முறையில்
வைத்துக் கூறுகின்றார்.

உடும்புரித் தன்ன வென்பெழு மருங்கிற்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
சில்செவித் தாகிய கேள்வி நொந்துநொந்
தீங்கெவன் செய்தியோ பாண பூண்சுமந்
5.தம்பகட் டெழிலிய செம்பொறி யாகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை
புனிறுதீர் குழவிக் கிலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொன் மலிநீர்
10.மன்பதை புரக்கு நன்னாட்டுப் பொருநன்
உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக்
கேவா னாகலிற் சாவேம் யாமென
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை யறையு மணிகொ டேர்வழிக்
15.கடுங்கட் பருகுநர் நடுங்குகை யுகுத்த
நறுஞ்சே றாடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பிற் படுமுழா வோர்க்கும்
உறந்தை யோனே குருசில்
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே. (68)

     திணை: அது. துறை: பாணாற்றுப்படை. சோழன் நலங்கிள்ளியைக்
கோவூர்கிழார் பாடியது.

    உரை: உடும்பு உரித்தன்ன என்பெழு மருங்கிற் கடும்பின் -
உடும்புரித்தாற்போன்ற எலும்பெழுந்த விலாப்புடையை யுடைய சுற்றத்து;
கடும் பசி களையுநர்க் காணாது - மிக்க பசியைத் தீரப்பாரைக்
காணாதே; சில் செவித்தாகிய கேள்வி நொந்து நொந்து - கேட்டார்
பலரும் அறிதற் கரிதாய் அறிவார் சிலராதலின் சில்
செவிக்கண்ணதாகிய யாழை இப்பாண் சாதியது உணவிற்கு
முதலாகப்பெற்ற பரிசு என்னென்று வெறுத்து; ஈண்டு எவன் செய்தியோ
- பாண இங்கே என் செய்கின்றாயோ பாண; பூண் சுமந்து - பூணைத்
தாங்கி; அம் பகட்டு எழிலிய செம்பொறி ஆகத்து -
அழகிய பெருமையையுடைய எழில் பெற்ற செம்பொறி பொருந்திய
மார்பினையுடைய; மென்மையின் மகளிர்க்கு வணங்கி -மென்மையான
மகளிர்க்குத் தாழ்ந்து; வன்மையின் ஆடவர்ப் பிணிக்கும் -
வன்மையான் வீரரை யகப்படுக்கும்; பீடு கெழு நெடுந்தகை - பெருமை
பொருந்திய நெடுந்தகை; புனிறு தீர் குழவிக் கிலிற்று முலை போல -
ஈன்றணிமை பொருந்தி அது தீர்ந்த குழவிக்குச் சுரக்கும் முலைபோல;
சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர் - நீர் மிக்க காவிரியினது கரை
மரத்தைச் சாய்க்கும் மிக்க வெள்ளம்; மன்பதை புரக்கும் நன்னாட்டுப்
பொருநன் - உலகத்து உயிர்ப்பன்மையைப் பாதுகாக்கும் நல்ல
சோழநாட்டையுடைய வேந்தன்; உட்பகை ஒரு திறம் பட்டென -
உட்பகை யொரு கூற்றிலே பட்டதென்னும்படி; புட்பகைக்கு
ஏவானாகலின் - எம்மைப் புட்செய்யும் பகையிடத்து
ஏவானாகலான்;
சாவேம் யாமென - யாம் எம்மிற் பொருது மடியக்கடவேமென்று;
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப - நீங்காத
மறத்தையுடையோர் தம்முடைய பூரித்த தோள்களைத் தட்ட; தனி
பறையறையும் அணி கொள் தேர் வழி - அவருடைய மேற்கொள்
தணிதற்குக் காரணமாகிய பறை யறையும் அழகு பொருந்திய தேர்
வழிக்கண்; கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த - வெய்ய
கள்ளைப் பருகுவார் தம் நடுங்கு கையான் உகுக்கப்பட்ட; நறுஞ்
சேறாடிய வறுந்தலை யானை - நறிய அச்சேற்றின்கண் ஆடிய பாக
ரேறாத யானை; நெடு நகர் வரைப்பிற் படுமுழா ஓர்க்கும் - நெடிய
நகரிடத் தொலிக்கும் பறையினது ஓசையைச் செவி தாழ்த்துக் கேட்கும்;
உறந்தையோன் - உறையூரிடத்தான்; குருசில் - அவ்விறைவன்; பிறன்
கடை மறப்ப நல்குவன் செலின் - நீ பிறன் வாயிலை நினையாமை
நினக்கு அளிப்பன் அவன்பாற் செல்வையாயின் எ-று.

     செம்பொறி யென்றது, “வரையகன் மார்பிடை வரையு மூன்றுள” (சீவக.
1426) என்றும் இலக்கணத்தை; திருமக ளெனினு மமையும். உறந்தையோ
னென்றது வினைக்குறிப்பு முற்று. பூண் சுமந் தெழிலிய அம் பகட் டாகத்து
நெடுந்தகை யென இயையும். பாண, நீ, செலின், நெடுந்தகை பொருநன்
குருசில், உறந்தையோன், அவன் பிறன் கடை மறப்ப நல்குவன்; நீ ஈங்கு
எவன் செய்தியோ வெனக் கூட்டுக. “உட்பகை யொருதிறம் பட்டென”
என்பதற்கு உள்ள பகை சந்தாகிய ஒரு கூற்றிலே பட்டதாக என்றுரைப்பினு
மமையும் பகட்டினுடைய தோற்றம் பொலிவு பெற வென்பாரு முளர். புட்பகை
யேவானாகலின் என்றோதி உள்ள பகை தம்மிற் கூடிற்றாக, புள்
நிமித்தத்திற்குப் பகைவன் ஏவானாகலின், சாவேம் யாமென மறவர் தோள்
புடைப்ப வென்றுரைப்பாரு முளர். புட்பகை யென்று இவனுக் கொரு பெயர்.

     விளக்கம்: சில் செவித்தாகிய கேள்வி யென்ற விடத்துக் கேள்வி யாழ்
என்றும், அவ் யாழிசையின் நலத்தைக் கேட்டறிவோர் சிலராதலின், “சில்
செவித்தாகிய கேள்வி” யென்றும் கூறினார். நொந்து நொந்து என அடுக்கியது.
வறுமை மிகுதியாற் பிறந்த வருத்த மிகுதி தோற்றுவித்து நிற்றலின், அதனை,
“இப் பாண் சாதியது உணவிற்கு முதலாகப் பெற்ற பரிசு என்னென்று
வெறுத்து” என விளக்கினார். பகடு - பெருமை; இது யானைக்கும்
உரியதாகலின், அதுபற்றி, அம்பகட்டெழிலிய வென்றதற்குப் பகட்டினுடைய
தோற்றம் பொலிவு பெற வென்பாரு முளர். என்றார். இலிற்றுதல் - சுரத்தல்.
மன்பதை - உயிர்த் தொகுதி. படை கொண்டு செல்லும் தலைவன், தன்
படையில் ஒரு பகுதிக்கண் உட்பகை தோன்றிற்றெனின், அதுகுறித்துச் செய்வன
செய்தற்கு மேற்செலவை நிறுத்திவிடுவேன்; அது போல வேந்தன் புட்பகைக்
கேவானாதல் கண்டு, “புட்பகை யொருதிறம் பட்டென” என்றார். புட்பகை.
காரி, செம்போத்து முதலிய பறவைகள் குறுக்கிட் டோடித் தீநிமித்தம் செய்தல்.
குறையத் தாராது மிக நிறையத் தருவன் என்பதுபட “பிறன்கடை மறப்ப”
என்றார்.