54. சேரமான் குட்டுவன் கோதை

     இவன், சேரநாட்டின் ஒரு பகுதியாகிய குட்ட நாட்டுக்கு உரியவன்
ஆதலால், இவன் குட்டுவன் கோதை யெனப்படுகின்றான். கோதை யென்பது
இயற்பெயர். இவன் காலத்தில் சோழ நாட்டில் இலவந்திகைப் பள்ளித்
துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியும் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா
வளவனும் ஆட்சி புரிந்தனர். “வானம் நாண வரையாது சென்றோர்க், கானா
தீயும் கவிகை வண்மைக், கடுமான் கோதை” யெனப்படுதலால், இவனது
கொடைச் சிறப்பும், “புலி துஞ்சு வியன்புலத் தற்றே, வலிதுஞ்சு தடக்கை
யவனுடை நாடே” என்பதனால், இவனது வென்றிச் சிறப்பும் புலவர் பாடும்
புகழ் பெற்று விளங்குகின்றன.

     இக் குமரனார், கோனாட்டு எறிச்சிலூரைச் சார்ந்த மாடல னென்பாற்கு
மகனாராவர். மாடல னென்ற பெயரை நோக்கின் இவர் பார்ப் பன ரென
அறியலாம். இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி
சேட்சென்னியும் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் இவராற்
பாடப்பட்டுள்ளனர். சோழர்கட்குத் தானைத் தலைவராகிய சோழிய வேனாதி
திருக்குட்டுவனையும் ஏனாதி திருக் கிள்ளியையும் இவர் பாராட்டிப்
பாடியிருக்கின்றார். இவர், கேட்போர் மனமகிழத்தக்க இனிய சொல்
லமையப் பாடல் வல்லவர். பெருந்திருமா வளவன் ஒரு கால் பரிசில்
நீட்டித்தானாக, இக் குமரனார், வெண்குடைச் செல்வமுடைய,
வேந்தராயினும், சீறூர் மன்னராயினும் எம்மால் வியக்கப்படுவோர்,
“எம்வயிற் பாடறிந் தொழுகும் பண்பினோரே” என்றும், “மிகப்பே ரெவ்வ
முறினும் எனைத்தும், உணர்ச்சி யில்லோ ருடைமை யுள்ளேம்,
நல்லறிவுடையோர் நல்குரவு உள்ளுதும்” என்றும் இவர் கூறுவது இவருடைய
உயர்ந்த மனமாண்பைப் புலப்படுத்துகிறது. சேரமான் குட்டுவன்
கோதையினுடைய கொடை நலனும், காவற்சிறப்பும், பிறர்க்கு அறிவுறுத்தும்
கருத்தால் மதுரைக் குமரனார், இப் பாட்டின்கண், “ஓரூரையுடைய தலைவன்
ஒருவன் அதனுட் செம்மாந்து புகுவது போல, சேரமான் குட்டுவன்
கோதையின் அவைக்களத்துட் செம்மாந்து செல்வது எம்போல்வார்க்கு
எளிது; அவனைப் பகைத்துப் போரெதிரக் கருதும் வேந்தர்க்கு, இடையன்
தன் ஆட்டு நிரையுடன் புகுதற்கஞ்சும் புலி துஞ்சும் காடு போலப் பேரச்சம்
விளைப்பதாகையால், புகுவதென்பது அரிது” என்று சிறப்பித்துக்
கூறுகின்றார்.

எங்கோ னிருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல விடையின்று குறுகிச்
செம்ம னாளவை யண்ணாந்து புகுதல்
எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே
5. இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்து
வான நாண வரையாது சென்றோர்க்
கானா தீயுங் கவிதை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
10. பாசிலைத் தொடுத்த வுவலைக் கண்ணி
மாசு ணுடுக்கை மடிவா யிடையன்
சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத் தற்றே
வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே (54)

     திணையும் துறையு மவை. சேரமான் குட்டுவன் கோதையைக்
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

     உரை: எங்கோன் இருந்த கம்பலை மூதூர் - எம்முடைய
இறைவன் இருந்த ஓசையையுடைய பழைய வூரிடத்து; உடையோர்
போல இடை யின்று குறுகி - அதனை யுடையவர்களைப் போலக்
காலம் பாராதே யணுகி; செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல் -
தலைமையுடைய நாளோலக்கத்தின் கண்ணே தலையெடுத்துச்
செம்மாந்து சென்று புகுதல்;எம் மன வாழ்க்கை இரவலர்க்கெளிது -
எம்மைப்போலும் வாழ்க்கையுடைய இரப்போருக்கு எளிது;
இரவலர்க்கு எண்மை யல்லது - இங்ஙனம் இரப்போர்க்கு எளிதாவ
தல்லது; புர வெதிர்ந்து - பாதுகாத்தலை ஏற்றுக்கொண்டு; வானம்
நாண வரையாது - மழை நாணும்படி எப்பொருளையும் வரையாது;
சென்றோர்க்கு - தன்பாற் சென்றவர்கட்கு; கவிகை ஆனாது ஈயும்
வண்மைக் கடு மான் கோதை - இடக் கவிந்த கையால் அமையாது
கொடுக்கும் வண்மையையுடைய கடுமான் கோதையது; துப்பு எதிர்ந்
தெழுந்த நெடு மொழி மன்னர் - வலியோடு மாறுபட்டெழுந்திருந்த
வஞ்சினங் கூறிய வேந்தர்; நினைக்குங்காலை - கருதுங்காலத்து;
பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி - பசிய இலையால்
தொடுக்கப்பட்ட தழைக் கண்ணியையும்; மாசுண் உடுக்கை - மாசுண்ட
உடையையும்; மடி வாய் இடையன் - மடித்த வாயையுமுடைய
இடையன்; சிறு தலை ஆயமொடு குறுகல் செல்லா - சிறிய
தலையையுடைய ஆட்டினத்தோடு கூட அணுகல் செல்லாத; புலி
துஞ்சு வியன் புலத் தற்று - புலி தங்கும் அகன்ற நிலத்தை 
யொக்கும்; வலி துஞ்சு தடக்கை யவனுடை நாடு - வலி
தங்கிய பெரிய கையை யுடையவனுடைய நாடு எ-று.


     எங்கோ னிருந்த மூதூர்ப் புகுதல் இரவலர்க் கெளிது; அவனுடைய
நாடு மன்னர் நினைக்குங்காலை இடையன் சிறுதலை யாயமொடு குறுகல்
செல்லாப் புலி துஞ்சு வியன்புலத் தற்றெனக் கூட்டி வினை முடிவு செய்க.
மன்னர்க்கு இடையனும் அவர் படைக்குச் சிறுதலை யாயமும் கோதை
நாட்டிற்குப் புலி துஞ்சு வியன் புலமும் உவமையாகக் கொள்க. உவலைக்
கண்ணி யென்றதனைப் பெயராகக் கொள்க. புலியுடை வியன் புல
மென்பதூஉம் பாடம்.

     விளக்கம்: மூதூரென முன்னர்க் கூறி உடையோ ரென்றமையின்,
“மூதூரை யுடையோரைப் போல்” என்றார்; அவரை யன்றிப் பிறர்
இடையின்று குறுகுதல் கூடாதாகலின். செம்மல் - தலைமை. “சேவடி படரும்
செம்ம லுள்ளமொடு” (முருகு:62) என்றாற்போல. எண்மை யுடையதனை
யெண்மை யென்றது உபசாரர். கவிகை: இறந்த காலத் தொக்க
வினைத்தொகை. நெடுமொழி: வஞ்சினம். துஞ்சுதல் - தங்குதல். உவலை
கருதி இடையன் குறுகல் செல்லா என இயைக்காமல், உவலையாற்
றொடுக்கப் பட்ட கண்ணி யெனப் பெயராக்குக வென்பார், “உவலைக்
கண்ணி யென்றதனை......கொள்க” என்றார். புலி துஞ்சு வியன் புலம்
ஆட்டிடையர் புகாத அச்சமுடைய தாதல் போலக் குட்டுவன் கோதையது
நாடு பகைவர் புகுதற் கச்சமுடைய தென இதனால் அவன் காவற்சிறப்புக்
கூறினாராம்; அதியமா னெடுமானஞ்சியின் காவற்சிறப்புக் கூறவந்த
ஒளவையார், “ஆர்வலர் குறுகினல்லது காவலர், கனவினுங் குறுகாக்
கடியுடை வியனகர்” (புறம்:390) என்றது ஈண்டு நினைவுகூரத் தக்கதாம்.