84.போரவைக் கோப்பெருநற்கிள்ளி பெருநற்கிள்ளியால் காமக் காதல் கொண்டொழுகும் நக்கண்ணையார் அவன் வாழ்ந்த மனையின் சிறைப்புறத்தில் வாழ்ந்து வந்தனர். அவனை யடிக்கடி கண்டும் இருந்தார். அவ்வாறிருந்தும், அவனை மணந்து கோடற்குரிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை; ஆயினும் அவன்பால் அவருக்குண்டாகிய காதல் பெருகிவருவதாயிற்று. அந்நிலையில் அவர் மிகவும் வருந்தி, என் தலைவனாகிய கிள்ளி, தன்னாடு நீங்கிப் போந்து ஈண்டு வாழ்வதால் வறியனாய்ப் புற்கையுண்டு வருகின்றானாயினும் தோட் பெருமை குன்றாதவன்; அவனை எளிதிற் காணுமாறு அவன் சிறைப்புறத்தே வாழினும் யான் பசப்புற்றுப் பொன்னிறமே பெறுவேனாயினேன்; அவன் போர்க்களம் புகின் போர் வீரர்க்கு ஏற்றிழிவுடைய துறைபோல வருத்தம் உண்டுபண்ணுகின்றான்; எனவே, அவன் வீரர்க்கும் எனக்கும் ஒப்ப வருத்தத்தைச் செய்கின்றான் காண் என்று இப்பாட்டின்கண் பரிந்து கூறுகின்றார். | என்னை, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே யாமே, புறஞ்சிறை யிருந்தும் பொன்னன் னம்மே போரெதிர்ந் தென்னை போர்க்களம் புகினே கல்லென் பேரூர் விழவுடை யாங்கண் | 5 | ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க் குமணர் வெரூஉந் துறையன் னன்னே.(84) |
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை: என்னை - என்னுடைய தலைவன்; புற்கை உண்டும் பெருந்தோளன் - தன் நாடிழந்த வறுமையால் புற்கை நுகர்ந்தானாயினும் பகைவரஞ்சத்தக்க பெரிய தோளையுடையன்; யாம் புறஞ் சிறை யிருந்தும்பொன்னன்னம் - யாம் அவனுடைய சிறைப் புறத்திருந்தும் பலகாலும் காணப் பெறினும் மெய்யுறப் பெறாமையின் வருந்திப் பொன்போலும் நிறத்தை யுடையே மாயினேம்; போர் எதிர்ந்து என்னை போர்க்களம் புகின் - போரை யேற்று என் தலைவன் போர்க்களத்தின் கட்புகின்; கல்லென் பேரூர் - கல்லென்னும் ஒலியையுடைய பெரிய வூரின்கண்; விழவுடை ஆங்கண் - போர் செய்தற்கெடுத்த விழா வினையுடைய அவ்விடத்து; ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு - தோள் வலி பேசி இன்பமுற்றுப் போந்த வீரர்க்கு; உமணர் வெரூஉம் துறை அன்னன் - உப்பு விற்பார் அஞ்சத்தக்க ஏற்றிழிவுடைய துறையை யொப்பன் எ-று.
என்னை புற்கை யுண்டும் பகை வெல்லும் பெருந்தோளனாம்; யாம் அவன் சிறைப்புறத்திருந்தும் பசப்பை வெல்லமாட்டாமையால் பொன் போன்றன மெனத் தன் வேட்கை மிகுதி கூறியவாறு. அன்றி, இதற்கு, என்னை புற்கையுண்டும் வழங்கும் பெரிய தோளையுடையனாயும் நம்மிடத்து அருளின்மையின், அவன் சிறைப்புறத்திருந்தும், பொன்போற் பசந்தே மென்று அழிந்து கூறியதாகப் பொருளுரைப்பாரு முளர். உணமர் வெரூஉம் துறையன்னன் என்றதனாற் பயன் வருத்துங் கூற்றில் ஆடவரையும் மகளிரையும் ஒக்க வருத்துவதல்லது அருளுமாறு கற்றிலனோ வென்னும் நினைவிற் றாக்குக.
விளக்கம்:கிள்ளி அரசகுமர னாதலின், அவன் புற்கையுண்டற்குக் காரணம் காட்டல் வேண்டி; நாடிழந்த வறுமையால் என அவன் வரலாறு காட்டினார். ஆமூர் மல்லனை அட்டு நின்றமையால் அவன் தோள் பெருமை விளங்கினமை கண்டு, பெருந் தோளன் என்றார். பலகாலும் அவனைக் காணத்தக்க நிலையில் தாம் இருப்பினும், அவனை முயங்கப் பெறாமையின் கண் பசப்புற்றிருக்குமாறு தோன்றப் பொன்னன்னம் என்றும் பெறுதற்கரிய நலம் பசலையால் உண்ணப்பட்டுக் கழிதற் கிரங்குதலின் யாம் என்றும் கூறினார். பசலையால் மகளிர் கண் பொன்போறல், பூப்போ லுண்கண் பொன்போர்த் தனவே (ஐங். 16) என்பதனா லறிக. தம் வலியைத் தாமே வியந்து செருக்கி வந்து பின்பு அதனை யிழந்த வீரரை, ஏமுற்றுக் கழந்த வீரர் என்றார். |