122. மலையமான் திருமுடிக்காரி திருமுடிக்காரி தன் வண்மையிற் சலியாதிருத்தலைக் கண்ட கபிலர் பெருவியப்புற்று, திருமுடிக்காரி, நின் நாடு கடலாலும் கொள்ளப்படாது; பகை வேந்தராலும் கைக்கொள்ள நினைக்கப்படாது; ஆயினும் அஃது அந்தணர்க்குக் கொடைப் பொருளாயிற்று. மூவேந்தருள் ஒருவர் தமக்குத் துணையாதலை வேண்டி விடுக்கும் பொருள் இரவலர்க் குரித்தாயிற்று; நின் ஈகைக் ககப்படாது நிற்பது நின் மனைவியின் தோளல்லது பிறிதில்லை; அவ்வாறிருக்க நின்பாற் காணப்படும் பெருமிதத்துக்குக் காரணம் அறியேன் என்று இப் பாட்டிற் குறித்துள்ளார். | | கடல்கொளப் படாஅ துடலுந ரூக்கார் கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே வீயாத் திருவின் விறல்கெழு தானை | | 5 | மூவரு ளொருவன் றுப்பா கியரென | | | ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே வடமீன் புரையுங் கற்பின் மடமொழி அரிவை தோளள வல்லதை | | 10 | நினதென விலைநீ பெருமிதத் தையே. (122) |
திணை: பாடாண்டிணை. துறை : இயன்மொழி. அவனை அவர் பாடியது.
உரை : கடல் கொளப்படாது - கடலாற் கொள்ளப்படாது; உடலுநர் ஊக்கார் - அதனைக் கொள்ளுதற்குப் பகைவர் மேற் கொள்ளார்; கழல் புனை திருந்தடி காரி - வீரக்கழலணிந்த இலக்கணத்தால் திருந்திய நல்ல அடியையுடைய காரி; நின் நாடு - நினது நாடு; அழல் புறந்தரூஉம் அந்தணரது - அது வேள்வித்தீயைப் பாதுகாக்கும் பார்ப்பாருடையது; வீயாத் திருவின் விறல் கெழு தானை- கெடாத செல்வத்தினையும் வென்றி பொருந்திய படையையுமுடைய; மூவருள் ஒருவன் துப்பாகியர் என - மூவேந்தருள் ஒருவனுக்கு வலியாக வேண்டுமென்று; ஏத்தினர் தரூஉம் கூழ் - அம் மூவர்பானின்றும் வந்தோர் தனித்தனி புகழ்ந்து நினக்குத் தரும் பொருள்; நும் குடி வாழ்த்தினர் வரூஉம் இரவலரது - நுமது குடியை வாழ்த்தினராய் வரும் பரிசிலருடையது; வடமீன் புரையும் கற்பின் - ஆதலால் வட திசைக்கண் தோன்றும் அருந்ததியையொக்கும் கற்பினையும்;மட மொழி - மெல்லிய மொழியினையு முடைய; அரிவை தோள் அளவு அல்லது - அரிவையுடைய தோள் மாத்திரையல்லது; நினது என இலை - நின்னுடையதென்று சொல்ல ஒன்றுடைய யல்லையாயிருக்கவும்; நீ பெருமிதத்தை - நீ பெரிய செருக்கினை யுடையையாயிராநின்றாய், இதற்குக் காரணமென்னையோ எ-று.
ஏத்தினர் தரூஉ மென்று பன்மையாற் கூறியது, அவ்வேந்தன் அமைச்சரை, மூவருள் யானொருவன் எனக்குத் துப்பாகியர் என அம் மூவரும் ஏத்தினர் தரூஉ மென் றுரைப்பினு மமையும்.
நாடு அந்தணரது; கூழ் இரவலரது; அரிவை தோள் அளவல்லதை நினக்கு உரித்தாகக் கூறுதற்கு யாதும் இல்லையாயிருந்தது; நீ பெருமிதத்தை யுடையையாயிருந்தா யென வியந்து கூறியவாறு.
விளக்கம்:காரியின் மலைநாடு உள்நாட்டதாகலின், கடல் கொளப்படாது என்றும், முடிவேந்தர் மூவரும் துணையாக விரும்பும் பெருவலி படைத்தவனாதலின், உடலுநர் ஊக்கார் என்றும் கூறினார். திருந்தடி என வாளாது கூறினமையின், இலக்கணத்தால் திருந்திய அடி என உரை கூறப்பட்டது. துணை வலியாக வேண்டுமென வேந்தர் விடுப்ப வரும் பொருளைக்கொண்டு இரவலர் பசிப்பிணி தீர்த்தலின், அதனைக் கூழ் என்றார். மூவருள் ஒருவன் துப்பாகியர் என்றதற்கு மூவேந்தருள் ஒருவனுக்கு வலியாக வேண்டும் எனப் பொருள் கூறினமையின், வேறு வகையாகக் கூறப்படும் பொருளை, மூவருள்.....அமையும் என்றார். பண்டைத் தமிழ்மக்கள் தம் தாளாற்றலால் ஈட்டிய பொருளை இரவலர்க்கீத்துப் பெறும் புகழையே புகழாகக் கருதுவர்; தாயத்தாற் பெற்ற செல்வத்தை வழங்கிப்பெறும் புகழை விரும்புவதிலர். இந்நூன் முழுதும் தாளாற்றலாற் பெற்ற பொருளே பரிசிலர்க்கு வழங்கப்படுவதை யெடுத்தோதுவதைப் படிப்பவர் நன்கறிவர். பொருளை யீட்டியது போலத் தம் ஆண்மை நலத்தால் மணந்து கொள்ளப்பட்டாராயினும், மகளிர் வாழ்க்கைத் துணையாகக் கருதப் பட்டமையின், கொடைக்குரியராகார் என்பது தமிழ் நூன் மரபு. அதனால், தன்னிற் பிரித்துப் பிறர்க்கு நல்கக்கூடிய பொருளன்மையின், அரிவைதோ ளளவல்லதை நினதென இலை என்றார். மனைவியை விலைப்பொருளாகக் கருதி விற்றலும், பிறர்க்கீத்தலும் வடநூன் மரபு. |