41. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     ஆசிரியர் கோவூர் கிழார், இப்பாட்டின்கண் இக் கிள்ளிவளவனைச்
சினப்பித்தோர் நாட்டு மக்கள், நனவின்கண் திசைகளில் எரி கொள்ளி
வீழ்ச்சி முதலிய தீ நிமித்தங்களும், கனவின்கண் வாயிற் பல் வீழ்தல்
முதலிய தீ நிகழ்ச்சிகளும் கண்டு, நின்மேற் செலவு நினைந்து அஞ்சித்
தாமெய்தும் மனக்கலக்கத்தை மகளிர் அறியாவாறு மறைத்து
அலமருகின்றனர் எனக் கொற்ற வள்ளை பாடிச் சிறப்பிக்கின்றார்.

காலனும் காலம் பார்க்கும் பாராது
வேலீண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தே
திசையிரு நான்கு முற்க முற்கவும்
5. பெருமரத், திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும்
வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும்
எயிறுநிலத்து வீழவு மெண்ணெ யாடவும்
களிறுமேல் கொள்ளவுங் காழக நீப்பவும்
10. வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
கனவி னரியன காணா நனவிற்
செருச்செய் முன்பநின் வருதிற னோக்கி
மையல் கொண்ட வேமமி லிருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்
15.கெவ்வங் கரக்கும் பைதன் மாக்களொடு
பெருங்கலக் குற்றன்றாற் றானே காற்றோ
டெரிநிகழ்ந் தன்ன செலவிற்
செருமிகு வளவநிற் சினைஇயோர் நாடே. (41)

     திணை: வஞ்சி. துறை: கொற்றவள்ளை. குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது. 

     உரை: காலனும் காலம் பார்க்கும் - கூற்றும் தன்னால் உயிர்
கொள்ளலாம் காலம் வருந்துணையும் பார்க்கும்; பாராது - அவ்வாறு
காலம் பாராது; வேலீண்டு தானை விழுமியோர் தொலைய - வேல்
நெருங்கிய படையினையுடைய பெரியோர் மாளும் பரிசு; வேண்டிடத்
தடூஉம் வெல் போர் வேந்தே - நீ வேண்டிய விடத்தே கொல்லும்
வெல்லும் போரையுடைய வேந்தே; திசை இரு நான்கும் உற்கம்
உற்கவும் - எட்டுத்திசையும் எரி கொள்ளி எரிந்து வீழவும்; பெரு
மரத்து இலையில் நெடுங் கோடு வற்றல் பற்றவும் - பெரிய
மரத்தின்கண்ணே  இலையில்லாத நெடிய கோடாகியது வற்றல்
பற்றவும்; வெங்கதிர்க் கனலி துற்றவும் - வெய்ய சுடரையுடைய
ஞாயிறு பலவிடத்தும் செறிந்து தோன்றவும்; பிறவும் - மற்றும்;
அஞ்சுவரத்தகுந புள்ளுக் குரல் இயம்பவும் - அஞ்சத் தகுவனவாகிய
புட்கள் குரலிசைப்பவும்; எயிறு நிலத்து வீழவும் - பல் நிலத்தின்
கண்ணே வீழவும்; எண்ணெய் ஆடவும் - எண்ணெயை மயிரின்
கண்ணே வார்க்கவும்; களிறு மேல் கொள்ளவும் - பன்றியேற்றை
யேறவும்; காழகம் நீப்பவும் - ஆடையைக் களையவும்; வெள்ளி
நோன்படை கட்டிலொடு கவிழவும் - வெளிதாகிய வலிய படைக்கலம்
தானிருந்த கட்டிலுடனே மறியவும்; கனவின் நனவின் அரியன காணா-
இங்ஙனம் கனாவினும் மெய்ம்மையினும் பொறுத்தற்கரியவற்றைக்
கண்டு; செருச் செய் முன்ப - போர் செய்யும் வலியையுடையோர்;
நின்வரு திறன் நோக்கி - நின் மேற்செலவின் கூறுபாட்டைக் கருதி;
மையல் கொண்ட ஏமமில் இருக்கையர் - மயக்கம் பொருந்திய
காவலில்லாத இருத்தலை யுடையராய்; புதல்வர் பூங்கண் முத்தி - தம்
பிள்ளைகளுடைய பூப் போலுங் கண்ணை முத்தங் கொண்டு;
மனையோட்கு எவ்வம் கரக்கும் - தம் மனைவியர்க்குத் தமது
வருத்தம் தோன்றாமல் மறைக்கும்; பைதல் மாக்களொடு -
துன்பத்தையுடைய ஆடவரோடு; பெருங்கலக் குற்றன்று - மிக்க
கலக்கமுற்றது; காற்றோடு எரி நிகழ்ந் தன்ன செலவின் - காற்றுடன்
எரி நிகழ்ந்தாற்போன்ற செலவையுடைய; செருமிகு வளவ -
போரின்கண்ணே மிக்க வளவ; நிற்சினைஇயோர் நாடு - நின்னைச்
சினப்பித்தோருடைய நாடு எ-று.

     உற்க வென்றது, வீழ்தல். உற்க முதலிய நான்கும் உற்பாதமாய்
நனவிற் காணப்பட்டன; எயிறு நிலத்து வீழ்தல் முதலாயின கனவிற்
காணப்பட்டன. வருதிறன்: ஈண்டுச் செல்லுந் திறனென இடவழுவ மைதியாய்
நின்றது. “மனையோட் கெவ்வம் கரக்கு” மென்பது “ஏவலிளையர் தாய்
வயிறு கறிப்ப” என்றாற் போலப் பன்மைக் கேற்ப நின்றது. தான்: ஈண்டு
அசைநிலை பெருமரத்துப் பற்றவும் என இயையும் - இலையில் நெடுங்கோடு
வற்றல் பற்றவு மென்பதற்கு நெடுங்கோட்டின்கண்ணே இலையில்
வற்றற்றன்மை பற்றவுமென வுரைப்பினுமமையும்.

     வேந்தே, முன்ப, வளவ நீ இத்தன்மையை யாதலால், நிற்சினைஇயோர்
நாடு பைதன் மாக்களொடு பெருங் கலக்குற்றதெனக் கூட்டுக.
காற்றோ டெரி நிகழ்ந் தன்ன செலவிற் செருமிகு வளவ வென
மன்னவன்  புகழும்,  நிற்கனைஇயோர்  நாடு  பைதன் மாக்களொடு
பெருங்கலக் குற்றன் றென ஒன்னார் நாடழி பிரங்கியதும் கூறுதலால், இது
கொற்றவள்ளை யாயிற்று.

     விளக்கம்: உயிர்கள் அவை நின்ற உடம்பினின்று நீங்குதற்குரிய
காலம்  பார்த்து  நீக்கும்  இயல்புபற்றிக் கூற்றுவனைக் காலன் என்ப.
அதனால் “காலனும் காலம் பார்க்கும்” என்றார். வேலீண்டு தானைக் கண்
விறல் மிக்க செய்கைகளால் உயர்ந்த பெரியோரை “விழுமியோர்” என்றார்.
உற்கம், எரி கக்கும் விண்மீன்; அஃது எரிந்து வீழும் செய்தியை “உற்குதல்”
என்பவாகலின், “உற்கம் உற்கவும்” என்றார். கனலையுடைய ஞாயிறு கனலி
யெனப்பட்டது. களிறு - பன்றி; கேழற் கண்ணும் கடிவரை யின்றே”
(மரபு:35) என்றலின், கேழற் பன்றியைக் களி றென்றார். வெள்ளி -
வெண்மை நிறமுடையது. தாம் இருக்கும் இருக்கை போதிய காவலின்றி
யிருத்தலால், ஆங்கிருப்போர் அதனை யுணர்ந்து வரும் தீங்கு குறித்து
அறிவு மயங்குகின்றமை தோன்ற, “மையல் கொண்ட வேமமில்
இருக்கையர்” என்றார். முத்துதல், முத்தமிடுதல். தன்னை யின்றியமையாத
மனையவள் தனக்குளதாகும் வருத்தமறியின் பெரும் பேதுற்றுத் தன்
நெஞ்சின் வலியைச் சிதைப்ப ளென்ற அச்சத்தால் “மனையோட்கு எவ்வம்
கரத்தல்” நிகழ்வதாயிற்று. வருதிறன் - மேற்செல்லுந் திறம். படர்க்கைக்குரிய
செல்லுதல் கூறவேண்டிய விடத்துத் தன்மை முன்னிலைகட்குரிய வருதல்
என்ற சொல்லைக் கூறியது வழுவமைதியாயிற்று. மனையோள் என்ற
ஒருமையும் மாக்களென்ற பன்மையும் இயைவது, “ஏவ லிளையர் தாய் வயிறு
கறிப்ப” என்றாற் போலப் பன்மைக்கேற்ப நின்ற தென்றார். ஒரு
மனைவியை மணப்பதே பண்டைத் தமிழ் வழக்காதல் அறிக.