48. சேரமான் கோக்கோதை மார்பன்

     சேர வேந்தருள் ஒருவனான இவன், கோதை மார்பன் என்னும்
இயற்பெயரை யுடையவன் இவனுடைய தலைநகரம் தொண்டி யென்பது.
இவனது நாடு குறிஞ்சி வளமும், மருத வளமும், நெய்தல் வளமும்
பொருந்தியது. இவன் பொய்கையார் முதலிய புலவர் பெருமக்களை
ஆதரித்து அவராற் பாடப்பெறும் சிறப்புப் பெற்றவன். இச் சேரமானுக்கும்
கூடல் நகரிலிருந்து ஆட்சி புரிந்த பழையன் மாறன் என்ற பாண்டிய
மன்னனுக்கும் பகைமை யுண்டு. அக் காலத்தே சோழ வேந்தனான கிள்ளி
வளவன் பழையன் மாறன்பாற் பகைமைகொண்டு கூடலை முற்றுகை செய்து,
மாறனை வென்று, அவனுடைய குதிரை யானை முதலிய பலவும்
கைக்கொண்டான். தான் செய்தற்குரிய செயலைக் கிள்ளிவளவன் செய்தது
கண்டு, இச் சேரமான் பேருவகையுற்றுச் சிறந்தான். இச் சேரனது
வள்ளன்மை புலவர் பாடும் புகழ்பெற்றதாகும்.

     இப் பாட்டின்கண் பொய்கையார், கோதை மார்பன்பாற் சென்று
அவன் போரில் மேம்படும் புகழைப் பாடிப் பெருவளம் பெற்று வருபவர்,
வேறொரு புலவரைக் கண்டு, அவரை இச் சேரன்பால் ஆற்றுப்
படுக்கின்றார்.

     ஆசிரியர் பொய்கையார், இச் சேரனை இரண்டு பாட்டுக்கள் பாடிச்
சிறப்பிக்கின்றார்.  இவருடைய  ஊர்  சேரநாட்டுத் தொண்டி நகரம்.
இந்நகரத்து வாயிற் கதவில் மூவன் என்பா னொருவனது பல்லைப் பிடுங்கி
இழைத்திருக்கும் செய்தி யொன்றை இவர் குறிக்கின்றார். கோக்கோதை
மார்பனை இவர் “கானலந் தொண்டிப் பொருநன்” என்றும்,
“தெறலருந்தானைப் பொறையன்” என்றும் குறிக்கின்றார். சோழன்
செங்கணான் சேரமான் கணைக்கா லிரும்பொறையொடு செய்த போரைப்
புகழ்ந்து பாடப்பட்டுள்ள களவழி நாற்பது இவர் பாடிய தென்பர்.

கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்

கள்நா றும்மே கானலந் தொண்டி
5. அன்னோற் படர்தி யாயி னீயும்
எம்மு முள்ளுமோ முதுவா யிரவல
அமர்மேம் படூஉங் காலைநின்
புகழ்மேம் படுநனைக் கண்டன மெனவே. (48)

     திணை: பாடாண்டிணை. துறை: புலவராற்றுப்படை.
சேரமான்கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது.

     உரை: கோதை மார்பின் கோதையானும் - கோதையுடைய
மார் பிற்கணிந்த கோதையானும்; கோதையைப் புணர்ந்தோர்
கோதை யானும் - அக் கோதையைப் புணர்ந்த மகளிர் சூடிய
கோதையானும்;மாக்கழி மலர்ந்த நெய்தலானும் - கரிய கழியின்கண்
மலர்ந்த நெய்தற் பூவானும்; கள் நாறும் கானலம் தொண்டி - தேன்
நாறாநிற்கும் கானலையுடைய தொண்டி; அஃது எம் மூர் - அஃது
எம்முடைய வூர்; அவன் எம் இறைவன் - அவன் எம்முடைய
தலைவன்; அன்னோற் படர்தி யாயின் - அத் தன்மையோனிடத்தே
போகின்றாயாயின்; நீயும் எம்மும் உள்ளுமோ - நீயும் எம்மையும்
நினைப்பாயாக; முது வாய் இரவல - முதிய வாய்மையையுடைய
இரவல; அமர் மேம்படூஉங் காலை - நீ அமரின்கண் மேம்படுங்
காலத்து; நின் புகழ் மேம்படுநனைக் கண்டனம் என - நினக்கு
உளதாகிய புகழை மேம்படுத்துமவனைக் கண்டேம் யாமெனச்
சொல்லி எ-று.

     இரவல, நீயும் அன்னோற் படர்குவையாயின், நின் புகழ் மேம்படு
நனைக் கண்டன மென எம்மையும் உள்ளெனக் கூட்டுக. கண்டன மென
எம்மும் உள்ளென்றாரேனும், உள்ளிக் கண்டனமெனச் சொல்லென்பது
கருத்தாகக் கொள்க. மோ: முன்னிலை யசைச்சொல். நீயு மென்பதூஉ எம்மு
மென்பதூஉம் எச்சவும்மை.

     தலைவனது இயல்பையும் ஊரையும் கூறி, முதுவாயிரவல எம்முள்
உள்ளெனத் தன் தலைமை தோன்றக் கூறினமையின், இது புலவராற்
றுப்படை யாயிற்று.

     விளக்கம்: இடையறாச் சேறுடைமையால், கருத்திருக்கும் கழியை
“மாக்கழி” யென்றார்; குவளை முதலிய பூக்களின் மிகுதியால் கருத்துத்
தோன்றுதல்பற்றி இவ்வாறு கூறப்பட்டதென்றுமாம். அறிவு முதிர்ந்த
வாய்மையையுடைய இரவலன் (முருகு.284உரை) என்பர் நச்சினார்க்கினியர்.
உள்ளு மென்பதை எச்சப்படுத்தி, உள்ளிக் கண்டன மென இயைத்துக்
கொள்ளவேண்டு மென்பது கருத்து.