139. நாஞ்சில் வள்ளுவன் பிறிதொருகால், மருதனிள நாகனார் வள்ளுவன்பால் பரிசில் பெறுதல் வேண்டிச் சென்றார். தமக்குப் பரிசில் இன்றியமையாமையும் அதனை விரையப் பெறவேண்டி யிருத்தலையும் அவற்கு நேரே யுரைத்தல் இயலாமையின், பாணன் ஒருவன் விரும்பிக் கேட்கும் வாய்பாட்டால், இப்பாட்டின்கண் வைத்து, வேந்தே, என் பின்னே வரும் இளைய மகளிரும் விறலியரும் வாழ்தல் வேண்டியான் பொய் கூறுவேனல்லேன்; மெய்யே கூறுகின்றேன்; எனது இப்போதைய நிலைமை நீ மனம் கனிந்து நல்கும் காலத்தை நோக்கியிருத்தற் கேற்றதன்று, நினக்குரிய முடிவேந்தனாகிய சேரனோ, நினக்கு வேண்டியவற்றை வேண்டியாங்குக் கொடுத்தற்கு அஞ்சான்; அவன் பொருட்டு நீ சாதற்கும் அஞ்சாய்; ஒருகால் போருண்டாயின், நின் செவ்வி கிடைக்குந் துணையும் என் சுற்றம் பசித்துன்பத்தைப் பொறாது; ஆதலால் யாம் வேண்டும் பரிசிலை இன்னே தருவாயாக எனக் குறித்துள்ளார். | சுவலழுந்தப் பலகாய சில்லோதிப் பல்லிளைஞருமே அடிவருந்த நெடிதேறிய கொடிமருங்குல் விறலியருமே | 5 | வாழ்தல் வேண்டிப் | | பொய்கூறேன் மெய்கூறுவல் ஓடாப் பூட்கை யுரவோர் மருக உயர்சிமைய வுழாஅ நாஞ்சிற் பொருந மாயா வுள்ளமொடு பரிசி லுன்னிக் | 10 | கனிபதம் பார்க்குங் காலை யன்றே | | ஈத லானான் வேந்தே வேந்தர்க்குச் சாத லஞ்சாய் நீயே யாயிடை இருநில மிளிர்ந்திசி னாஅங் கொருநாள் அருஞ்சமம் வருகுவ தாயின் | 15 | வருந்தலு முண்டென பைதலங் கடும்பே. (139) |
திணை : அது. துறை : பரிசில் கடாநிலை. அவனை அவர் பாடியது.
உரை : சுவல் அழுந்தப் பல காய - தோள் வடுப்படப்பல முட்டுக்களையும் காவிய; சில்லோதிப் பல் இளைஞரும் - சிலவாய மயிரையுடைய பல இளையோரும்; அடி வருந்த நெடிது ஏறிய - அடிவருந்த நெடும்பொழுது ஏறிய; கொடி மருங்குல் விறலியரும் - கொடிபோலும் இடையினையுடைய விறலியரும் என இவர்; வாழ்தல் வேண்டி - வாழ்தலை விரும்பி; பொய் கூறேன் மெய் கூறுவல் - பொய் சொல்லேன் மெய் சொல்லுவேன்; ஓடாப் பூட்கை உரவோர் மருக - புறங்கொடாத மேற்கோளையுடைய வலியோர் மரபி லுள்ளானே! உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந - உயர்ந்த உச்சியை யுடைத்தாய் உழப்படாத நாஞ்சிலென்னும் பெயரையுடைய மலைக்குவேந்தே; மாயா உள்ளமொடு - மறவாத நினைவுடனே; பரிசில் உன்னி - பரிசிற்கு வந்து பொருந்தி; கனி பதம் பார்க்கும் காலையன்று - பின்பு நின்று நின் மனம் நெகிழும் செவ்வி பார்க்கும் காலமன்று யான் வறுமையுற்று நிற்கின்ற நிலைமை; ஈதலானான் வேந்து - நினக்கு வேண்டிற்றுத் தருதலை அமையான் நின்னுடைய அரசன்; வேந்தற்குச் சாதல் அஞ்சாய் நீ - அவ்வரசன் பொருட்டுச் சாதலுக்கு அஞ்சாய் நீ; ஆயிடை - அவ்விடத்து; இரு நிலம் மிளிர்ந்திசி னாஅங்கு - பெரிய நிலம் பிறழ்ந்தாற் போல; ஒருநாள் அருஞ் சமம் வருகுவ தாயின் - ஒருநாள் பொறுத்தற்கரிய பூசல் வருவதாயின்; வருந்தலுமுண்டு என் பைதலங் கடும்பு - வருந்துதலு முளதாம் எனது பசித்துன்பத்தையுடைய சுற்றம் எ-று.
அதனாற் போர் வருதன் முன்னே பரிசில் தந்து விடுவாயாக வென்பது கருத்து. வேந்து என்றது சேரனை.
விளக்கம் : அழுந்தியவழி வடு வுண்டாதலால், அழுந்த வென்றதற்கு வடுப்பட வென வுரை கூறினார். இளைஞரென்றது, சில்லோதி யென்ற அடைச்சிறப்பால் பெண்பால் குறித்து நின்றது. புரை தீர்ந்த நன்மை பயக்குமாயின், பொய்ம்மையும் வாய்மையாம் என்பது கொண்டு, வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன் என்றார். நாஞ்சில் உழுகின்ற கலப்பைக்கும் பெயராதலின், நாஞ்சில் மலையை உழாஅ நாஞ்சில் என வெளிப்படுத்தார். பரிசில் உன்னி - பரிசில் கருதிப் போந்து என்று பொருள் படுதலின், பரிசிற்கு வந்து பொருந்தி யென்றார். பரிசில் துன்னி என்றும் பாடம் கூறுவர்.கனி பதம் - மனம் அருளாற் கனிந்து நெகிழும் காலம். வேந்து ஈதலானான் என்றும், அவற்கு நீ சாதல் அஞ்சாய் என்றும் கூறுதலின், நாஞ்சில் வள்ளுவன் குறுநில மன்னனென்றும், வேந்தென்றது சேரனை என்பதனால், இவ் வள்ளுவற்குத் தலைமை வேந்தன் சேரன் என்றும் அறியலாம். அருஞ்சமம் வருகுவதாயின் என்றது, அச் சமத்தின்கண் ஈடுபடின் நின் செவ்வி எமக்குக் கிடைத்த லரிதாம்; அதனால் எம் சுற்றத்தின் பசித்துன்பம் நீங்குவது நீட்டிக்கும் என்றவாறு. அதனால்...கருத்து என்பது குறிப்பெச்சம். |