66. சோழன் கரிகாற் பெருவளத்தான் சேரமான் பெருஞ்சேரலாதனோடு பொருது வெற்றிபெற்று மகிழ்ந்த கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் என்னும் புலவர் பெருமாட்டியார் கண்டார். அச் சேரமான் புறப்புண்ணாணிவாள் வடக்கிருந்ததும், அது கண்டு, வீரராகிய சான்றோர் பலர் உயிர் துறந்ததும் கேள்வியுற்றிருந்த அவர்க்கு, கரிகாலனது வன்மையும், சேரமானது மானவுணர்வும் பெருவியப்பைப் பயந்தன. இதனினும் சிறப்புடைய பொருள் தாம் பாடுதற் கில்லாமை தேர்ந்து இப்பாட்டின் கண் இதனைப் பொருளாக அமைத்து, களியியல் யானைக் கரிகால் வளவ, பல போர்களினும் பகைவரை வென் றுயர்ந்த நின் ஆற்றல் மிக விளங்குமாறு பெருஞ்சேரலாதனை வென்றனை; ஆயினும் வெண்ணிப் பறந்தலைக்கண் நின்னால் உண்டாகிய புறப்புண்ணுக்கு நாணி வாள் வடக்கிருந்து இவ் வுலகத்தே புகழ் மிக எய்திய சேரலாதன் நின்னினும் நல்ல னன்றே என்று பாடியுள்ளார். வெண்ணி யென்பது, தஞ்சை மாநாட்டில் உள்ளதோர் ஊர். இது வெண்ணில் என்றும் வழங்கும். குயத்தியார் என்பது இப்புலவர் பெருமாட்டியின் பெயர். வேட்கோவருள் சிறந்தோர்க்குப் பண்டை நாளில் வேந்தர் குயம் என்னும் பட்டம் தந்து சிறப்பித்தல் மரபு. இவர் குயத்தியார் எனப்படுதலால், வேட்கோவருள் சிறந்தவ ரென்பது துணிபாம். இம்மரபு பத்தாம் நூற்றாண்டு வரையில் இருந்திருக்கிறது. கடலில் இயங்கும் காற்றைக் கலஞ் செலுத்துதற்குப் பணி கொள்ளும் விரகினை முதன் முதலிற் கண்டவர் பண்டைத் தமிழரே; உரோமானிய ரல்லர் என்பது இவர் பாட்டால் வலிபெறுகிறது. கரிகாலன் முன் இவர் அவர்க்குத் தோற்ற,பெருஞ்சேர லாதனைச் சிறப்பித்து, வேந்தே, வெற்றிப் புகழ் ஒன்றே நீ பெற்றனை; அதனை நினக்குத் தந்து, நின்னாலுண்டாகிய புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து பெறும் பெரும்புகழை அவன் எய்தினான்; அவன் நின்னினும் நல்லன் போலும் என நயம்படக் கூறுவது இவரது புலமை நலத்தைப் புலப்படுத்துகிறது. | நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளிதொழி லாண்ட வுரவோன் மருக களியியல் யானைக் கரிகால் வளவ சென்றமர்க் கடந்தநின் னாற்ற றோன்ற | 5 | வென்றோய் நின்னினு நல்ல னன்றே | | கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புக ழுலக மெய்திப் புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே. (66) |
திணை: வாகை துறை: அரசவாகை. சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியது.
உரை: நளி யிரு முந்நீர் நாவாய் ஓட்டி - நீர் செறிந்த பெரிய கடலின்கண்ணே மரக்கலத்தை யோட்டி; வளி தொழிலாண்ட உரவோன் மருக - போர்செய்தற்குக் காற்றின்றி நாவாய் ஓடாதாக ஆண்டு வளிச் செல்வனை யழைத்து ஏவல் கொண்ட வலியோன் மரபிலுள்ளானே; களியியல் யானைக் கரிகால் வளவ - மதம் பொருந்திய யானையையுடைய கரிகால் வளவ; சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற வென்றோய் - மேற் சென்று போரை யெதிர்நின்று கொன்ற நினது வலி தோற்ற வென்றவனே; நின்னினும் நல்லன் அன்றே - நின்னினும் நல்லனல்லவே; கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை - தழைத்தலைக் கொண்ட புது வருவாயையுடைய வெண்ணி யென்னும் ஊர்ப்புறத்துப் போர்க்களத்தின் கண்; உலகம் புகழ் மிக எய்தி - உலகத்துப் புகழை மிகப்பொருந்தி; புறப் புண் ணாணி வடக்கிருந்தோன் - புறப் புண்ணிற்கு நாணி வடக்கிருந்தோன் அவ்வாறிருத்தலான் எ.று.
புகழெய்தி யென்றது, புறப்புண் நாணுதல்தன்னை. ஓட்டி யென்பதனை யோட்ட வெனத் திரிக்க. எய்தி, எய்த வெனத் திரிப்பினு மமையும். எய்தவென்று பாடமோதுவாரு முளர். உரவோன் மருக, கரிகால் வளவ, வென்றோய், வெண்ணிப் பறந்தலைப்பட்ட புறப்புண் நாணி உலகத்துப் புகழ் மிக எய்தி வடக்கிருந்தோன், நின்னினும் நல்ல னன்றே யெனக் கூட்டுக. இது, கரிகால் வளவன் வென்றி கூறியதாகலின் அரசவாகை யாயிற்று.
விளக்கம்: ஆண்டில் குறிப்பிட்ட காலத்தில் வீசும் வணிகக் காற்றின் வரவறிந்து கலஞ் செலுத்துவது முறையென்ற செய்தி ஆராய்ச்சியால் விளங்காமுன் இவ்வுரை யெழுதப்பட்டதாகலின், உரைகாரர், வளிதொழி லாண்ட வுரவோன் என்றதற்குத் தம் காலத்து வழங்கிய புராண கதை யொன்றைப் பெய்து கூறுகின்றார். மார்புகுறித் தெறிந்த வேல் முதுகிடத்தே புண்ணாக்கியது கரிகாலனது ஆற்றல் தோற்றுவித்து நிற்றலின், ஆற்றல் தோன்ற வென்றோய் என்றார். வெண்ணிப் பறந்தலை - வெண்ணி யென்னும் ஊர்க்குப் புறத்தேயுள்ள போர்க்களம். ஊர்க்குப் புறத்தே அதனருகே யுளதாகிய போர்க்களம் இவ்வாறு கூறப்படும்; கூடற் பறந்தலை, பாழிப் பறந்தலை, வாகைப் பறந்தலையென வருதல் காண்க. புகழுடையார்க்கன்றிப் புறப்புண்ணுக்கு நாணு தலுண்டாகாதாகலின், நாணுதலையே புகழென்றார். ஆற்றல் தோன்ற வென்று கொண்ட நின் புகழினும், விழுப்புண் பட்டும் புறப்புண்ணாணியும் சேரமான் கொண்ட புகழ் போற்றத்தக்க தென்றற்கு, நின்னினும் நல்ல னன்றே என்றார். |