124. மலையமான் திருமுடிக்காரி

     இரவலர் புரவலரை நாடிப் புறப்படுங்கால் நன்னாள் நோக்குதலும்
புள்நிமித்தம் காண்டலும் இயல்பு. “நாள் செய்வது நல்லோர் செய்யார்”
என்பது தமிழகத்துப் பண்டுதொட்டே இயன்று வரும் வழக்கு. நாளும்
நிமித்தமும் நலமாகாவழிப் பெறக் கருதும் பரிசில் எய்தாதென்று கருதினர்.
இவ்வண்ணம்கருதிக்கொண்டிருந்த சான்றோர் சிலரைக் கண்ட கபிலர்,
“மலையன் திருமுடியைக் காணச் செல்லும் இரவலர் நாளும் புள்ளும்
நோக்கவேண்டுவதிலர்; அவன்பால் அடையினும்,
செவ்வி நோக்குதலும்,
கூறத் தகுவன இவையென முன்னரே தம்முள் ஆராய்ந்து கோடலும்
வேண்டா; அவனைப் பாடிச் சென்றோர் வறிது பெயர்வதில்லை” யென்று
இப் பாட்டில் வற்புறுத்தியுள்ளார்.

 நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குவ ரல்லர் நெறிகொளப்
பாடான் றிரங்கு மருவிப்
5பீடுகெழு மலையற் பாடி யோரே.  (124)

     திணையும்துறையு மவை. அவனை அவர் பாடியது.

    உரை : நாள் அன்று போகி -நல்ல நாளன்றாகப் போகி; புள்
இடை தட்ப -புள் நிமித்தம் இடையே நின்று தடுப்ப; பதன் அன்று
புக்கு- செவ்வியன்றாகச் சென்று கூடி; திறன் அன்றுமொழியினும்
- கூறுபாடன்றாக முனியும்வார்த்தைகளைச் சொல்லினும்; வறிது
பெயர்குவர்அல்லர் - வறிதாக மீள்வா ரல்லர்; நெறி கொள் -
ஒழுங்குபட;பாடு ஆன்று இரங்கும் அருவி - ஓசை நிறைந்து
ஒலிக்கும்அருவியையுடைய; பீடு கெழு மலையன் பாடியோர் -
பெருமைபொருந்திய மலையையுடையோனைப் பாடியவர்கள் எ-று.

    மலையற்பாடியோர் வறிது பெயர்குவ ரல்லரெனக்கூட்டுக. அன்றி
யென்பது அன்றெனத்திரிந்தது செய்யுளாகலின்.வறி தென்னும் குறிப்பு
வினையெச்சம்,பெயர்குவ ரல்லரென்பதனுட் பெயர்தலோடு முடிந்தது.
வறியரென்றுரைப்பாரு முளர்.

    விளக்கம்: இன்றி யென்பது போல அன்றி யென்பதும் அன்று எனச்
செய்யுளில்உகரவீறாக வரும் என்பவாகலின், ஈண்டு அன்றியென்பது
அன்று என வந்தது. இஃது ஆசிரியர்தொல்காப்பியனாரால்
எடுத்தோதப்படாதுஉரையிற் கொள்ளவைக்கப்பட்டமையின், உரைகாரர்
“அன்றி....செய்யுளாகலின்”என்றார். பதம் - சென்று காண்டற்குரிய காலம்.
திறன்,கூறத் தகுவனவும் தகாதனவும் ஆகிய கூறுபாடுகள்.வாய்தவறிக்
கூறத்தகாதன கூறினும்அவற்றைக் கொள்ளாது வேண்டுவன நல்குவன்
என்பார்,“திறனன்று மொழியினும்” என்றார்.