180. ஈர்ந்தூர்கிழான் கோயமான்

     ஈர்ந்தூர் என்பது இக்காலத்தே கொங்கு  நாட்டில்  ஈஞ்சூர்  என
வழங்குகிறது. கோயமான் என்பான், இவ்வூரிலிருந்து   சோழ வேந்தர்க்குத்
துணைபுரிந்தவன்.  இவன் பெருஞ்செல்வ னல்லனாயினும்,   இரப்போர்க்கு
இல்லை யென்னாது   ஈயும் சிறப்பால் புலவர் பாடும் புகழ் பெற்றான்.
இவன் முடிவேந்தர்பொருட்டுப்     போருடற்றி,    அதனால்    வரும்
பொருளைப் பரிசிலர்க்கு  வழங்கும் பான்மையன். சேரமான் குட்டுவன்
கோதை, சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி,

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் ஆகிய
முடிவேந்தரைப் பாடிப் பெரும் பரிசில் பெற்ற  கோனாட்டு  எறிச்சிலூர்
மாடலன் மதுரைக் குமரனார், இவனையும் இப்பாட்டிற் பாடியுள்ளாரெனின்,
இவன் கொடுக்கும் கொடைப் பொருளினும் கொடுத்தற் கமைந்த
குணநலமே, பண்டை நல்லிசைச் சான்றோர் இவன்பால் வருவித்துப்
பாடச்   செய்ததென்பது  தெற்றெனத் தெளியற்பாற்று.இவனைப் பாடி
இவன் தந்த   பரிசிலைப் பெற்று   இன்புற்ற குமரனார்,  இப்பாட்டின்
கண்ணே  பரிசில்  பெற்ற  பாணனொருவன்,பெறாமையால் கொடுப்பாரை
யறியும் வேட்கையனாய்  வரும் வேறொரு பாணனுக்குக் கூறுவானாய்,
“பாண்பசிபபகைஞன் ஒருவன் ஈர்ந்தையில் உள்ளான்; அவன்  நிரம்பக்
கொடுக்கும் அத்துணைச்  செல்வமுடைய னல்லனாயினும், இல்லையென
மறுக்கும் சிறுமையுடையனல்லன்; போரிற் புண்பட்டு வடு நிறைந்த யாக்கை
யுடையவன்; நினக்கு   வறுமை  கெட விருப்பமாயின், எம்மொடு வருக;
யாம் சென்று அவனை இரப்போமாயின், அவன்  தன்னூர்க்  கொல்லனை
வருவித்து,   அவற்கு நம் உண்ணா வயிற்றினைக் காட்டி, “உடனே வேல்
வடித்துக் கொடு; யான் சென்று போருடற்றிப் பொருள் கொணர்ந்து,
இவர்தம் பசி தீர்த்தல் வேண்டும்‘ என்று  சொல்லி யிரப்பான்”என்று
பாடியுள்ளார்.

 நிரப்பாது கொடுக்குஞ் செல்வமு மிலனே
இல்லென மறுக்குஞ் சிறுமையு மிலனே
இறையுறு விழுமந் தாங்கி யமரகத்
திரும்புசுவைக் கொண்ட விழுப்பு ணோய்தீர்ந்து
5மருந்துகொண் மரத்தின் வாள்வடு மயங்கி
 வடுவின்று வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்
தீர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்
இன்மை தீர வேண்டி னெம்மொடு
நீயும் வம்மோ முதுவா யிரவல
10 யாந்தன் னிரங்குங் காலைத் தானெம்
 உண்ணா மருங்குல் காட்டித் தன்னூர்க்
கருங்கைக் கொல்லனை யிரக்கும்
திருந்திலை நெடுவேல் வடித்திசி னெனவே.
 (180)

    திணையுந் துறையு மவை. துறை: பாணாற்றுப் படையுமாம்.
ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன்
மதுரைக் குமரனார் பாடியது.

    உரை: நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலன் - நாடோறும்
தொடர்ந்து கொடுக்கும் செல்வமும்  உடையானல்லன்; இல்லென
மறுக்கும்   சிறுமையும்  இலன் - இங்ஙனம் வறிஞனாயினும்
இரந்தோர்க்கு  இல்லையெனச்  சொல்லி  மறுக்கும்  புன்மையு
முடையனல்லன்; இறையுறு விழுமம் தாங்கி - தன் அரசுக்கு வந்துற்ற
போரானமைந்த இடும்பைகளைத் தான் பொறுத்து; அமரகத்து  இரும்பு
சுகைக்கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து - அந்தப்  போரின்கண்
படைக்கலங்கள்  சுவைக்கொடை  சிறந்த புண்ணாகிய நோய் தீர்ந்து;
மருந்துகொள் மரத்தின் வாள் வடு மயங்கி - மருந்து வாங்கிக்கொள்ளப்
பட்ட மரம்போல  வாளுற்ற  வடு ஒன்றோடொன்று விரவி; வடு வின்று 
வடிந்த யாக்கையன் - ஆண்மைக் குறைபாடின்மையின் வசையின்றி 
அழகுபெற்ற உடம்பை யுடையனாய்; கொடையெதிர்ந்து வண்மையை
யேற்றுக்கொண்டு; ஈர்ந்தையோன் - ஈர்ந்தையென்னு மூரின்கண்ணே 
யிருந்தான்; பாண் பசிப் பகைஞன் - பாணரது பசிக்குப் பகைவனாயவன்; 
இன்மை தீரவேண்டின் - நினது வறுமை நீங்க வேண்டுவையாயின்;  நீயும்
வம்  மோ - எம்முடனே நீயும் வாராய்; முதுவாய் இரவல - முதிய
வா யையுடைய இரவல; யாம்தன் இரக்குங் காலை - யாம் தன்னை
யிரக்கும்பொழுது; தான் எம் உண்ணா மருங்குல் காட்டி - தான் எம்முடைய
உண்ணாத மருங்கினைக் காட்டி; தன்னூர்க் கருங்கைக் கொல்லனை இரக்கும்
-
தன்னுடைய ஊரின் வலிய கையினையுடைய கொல்லனை வேண்டிக்
கொள்ளாநிற்கும் அவன்; திருந்திலை நெடுவேல் வடித்திசின் என - 
திருந்தின இலையையுடைய நெடிய வேலை வடிப்பாயாக எனச் சொல்லி 
எ-று.


     பாண்  பசிப்  பகைஞன்,   ஈர்ந்தையோன்;   அவன் தன்னை யாம்
இரக்குங்காலைத் தான் எம் மருங்கைக் காட்டி, வேலை வடித்திசின் எனக்
கொல்லனை   யிரக்கும்;   இரவல, இன்மை தீரவேண்டின், எம்மொடு நீயும்
வருவாயாக, வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. இரக்குமென்று இழித்துக்
கூறியது,     பலகாலும்   வடிக்க   வேண்டுதலானும்   பசிக்கும்  உதவ
வேண்டுதலானும்.

     விளக்கம்: நிரப்பாது  கொடுத்தலாவது,  இலனென்னும் எவ்வம்
உரையாவாறு கொடுத்தல்; நாடோறும் தொடர்ந்து கொடுத்தாலன்றி, நிரப்பாது
கொடுக்கும்    கொடையாகாமையின், “நாடோறும் தொடர்ந்து கொடுக்கும்”
என்று உரைத்தல். நிரப்பு, இன்மை. “இல்லென இரந்தோர்க்கொன் றீயாமை
இளிவு”   (கலி.2) என்பவாகலின்,  இல்லென  மறுத்தல் சிறுமையாயிற்று.
இரும்பென்றது,     இரும்பாற் செய்யப்பட்ட போர்க் கருவிகள், விழுப்புண்,
முகத்தினும் மார்பினும் பட்ட புண். மருந்துகொள் மரம், ஈண்டு அத்திமரம்
என்க. அத்திரத்தின் பால் புண்ணுக்கிடுப. அதனால் அதன் அடிப்பகுதி
வெட்டுப்பட்ட   வடுக்கள்   நிரம்பியிருத்தலின்,  வடுப்பட்ட யாக்கைக்கு
உவகையாயிற்று.  வாஅள் வடு  நிறைந்திருப்பினும்,   ஆண்மைக்குறைவா
லுண்டாகும் வசையும் மெய்வலிக் குறைவாலுளதாகும் மெலியும் இல்லாதவன்
என்றற்கு, “வசையின்று வடிந்த யாக்கையன்”என்றார். தன் தாணிழற்கீழ் வாழும்
கொல்லனைத்  தான்  இரத்தல் அமையாதாகலின், அதற்கு அமைதிகூறல்
வேண்டி, “இரங்கு......உதவ வேண்டுதலானும்”என்று உரைகாரர் கூறினார்.