50. சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை

     இப் பெருஞ்சேர லிரும்பொறை செல்வக் கடுங்கோ வாழியாதன்
மகன்.இவன் தாய் வேளாவிக் கோமான் பதுமன் தேவி யெனப்
பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது. இவன் தகடூருக்குரிய அதியமானொடு
பொருது அவனது தகடூரை யெறிந்து கொண்டதனால் இவ்வாறு
சிறப்பித்துக் கூறப்படுகின்றான். இவனைப் பதிற்றுப்பத்திற் காணப்படும்
எட்டாம் பத்தைப் பாடிய அரிசில்கிழாருக்கு இவன் தன் கோயிலாளுடன்
வெளிப் போந்து கோயிலில்உள்ளனவும் அரசுங் கொள்கவென
வழங்கினான். அவர் அவற்றை ஏலாது வேறாகக் கொடுத்த ஒன்பது
நூறாயிரம் காணத்தைப் பெற்றுக்கொண்டு தமக்கு இவன் கொடுத்த
அரசினை இவனையே மேற்கொண்டாளுமாறு வேண்டி அமைச்சுப்
பூண்டார். இவன் பதினேழியாண்டு அரசு வீற்றிருந்தான். இவன் ஆட்சிக்
காலத்தே,புலவர் பலரும் இவனால் உயிரினும் சிறந்தாராகப் பாராட்டப்
பட்டனர். ஒருகால், இவனைக் காண்பதற்கு வந்திருந்த மோசிகீரனார்
என்னும் சான்றோர், வெற்றி முரசு வைக்கும் கட்டிலின்மேல் தன்னை
யறியாது கிடந்து உறங்கிவிட்டார். வெற்றித் திரு வீற்றிருக்கும்
கட்டிலின்மேல் வேறு பிறர் இருந்து உறங்குவதுகுற்றமாகும். அது
செய்வோர், கொலைத் தண்டத்துக் குரியவராவர். இஃது அக்கால அரசு
முறை. இதனை யறியாதவர் புலவர். அவர் உறங்கியதை யறிந்த
இவ்விரும்பொறை அவரைக் கொலை புரியாது, இனிதே உறங்குமாறு
அவர்க்குக் கவரிகொண்டு வீசலுற்றான். இதனால், இவன் வெற்றித் திருவும்
பிறவும் புலவர் புலமை மாண்பு நோக்கத் தாழ்ந்தன வெனக் கருதும்
கருத்தினனாதலை நன்கறியலாம்.

     இப் பாட்டின்கண். முரசு கட்டிலின்கண் அறியாது ஏறி உறங்கிக்
கிடந்த தனக்கு உறக்கம் தெளியுங்காறும் சாமரை வீசிய சேரமானது
பேரருளை வியந்து, மோசிகீரனார், “முரசினுடைய மென்பூஞ் சேக்கைக் கண்
அறியா தேறிய என்னை, வாளால் இருபாற் படுப்பதைச் செய்யாதருளிய
தொன்றே நீ தமிழ் முழுதும் நன்கறிந்த சிறப்புக்குப் போதிய சான்றாகும்.
அதனோ டமையாது, என்னை யணுக வந்து, முழவுத்தோள் கொண்டு, கவரி
வீசியதற்குக் காரணம் யாதுகொல்லோ? இவ்வுலகத்தே இசையுடையோர்க்
கல்லது உயர்நிலை யுலகத்துள் உறைவிடம் இல்லையெனச் சான்றோர்
கூறுதலை விளங்கக் கேட்ட கேள்விப்பயனோ நீ இங்கே இதனைச்
செய்தற்குக் காரணம்” எனக் கூறிப் பாராட்டுகின்றார்.

     ஆசிரியர் மோசி கீரனார், மோசி யென்பாருடைய மகனார்போலும்
இனி, மோசு கீரனார் என்று கொண்டு, மோசுகுடி யென்னும் ஊருண்மை
பற்றி அவ் வூரினராகக் கருதுபவரும் உண்டு. இவர், சேர நாட்டு
வேந்தனையே யன்றி, அவன் நாட்டிற்கடுத்த கொண்கான நாட்டுத்
தலைவனையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். அவன் கொண்கானங் கிழான்
எனப்படுவன். “உலகத்து வாழும் மக்கட்கு நெல்லும் நீருமன்று உயிர்;
மக்கள் மன்னனையே உயிராகக்கொண்டு வாழ்வர்; அதனால், வேந்தன்,
“யான் உலகிற் குயிராவேன் என்றறிந் தொழுகுதல் கடமையாகும்” என்று
பெருஞ்சேர லிரும்பொறைக்கு வற்புறுத்தி யுரைத்தவர் இவரே. கொண்கானங்
கிழானைக் காணச்சென்ற காலத்து, “முடிவேந்தர்பால் நெருங்கிப் பயிலும்
இவர், குறுநிலக் கிழாரைப் பாடிப் பரிசில் பெறல் வேண்டாவே” என்றொரு
கேள்வி யெழுந்தது. அதற்கு விடையிறுப்பார் போல, கடலருகே வாழினும்
நீர் வேட்கையுற்றோர் சிற்றூறலையே நாடுநர்; அதுபோல, அசரர்
உழையராகிய வழியும் புலவர் உயர்ந்த வள்ளியோரையே விரும்பிச்
செல்வர்; எனக்கு ஈயென இரத்தல் அரிதாயினும் இக்கொண்கானம் பாடுதல்
எளிதுகாண்” என்று பாடுகின்றார்.

மாசற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார்
பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக்
5. குருதி வேட்கை யுருகெழு முரசம்
மண்ணி வாரா வளவை யெண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியா தேறிய வென்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வா யொழித்ததை
10. அதூஉஞ் சாலுநற் றமிழ்முழு தறிதல்
அதனொடு மமையா தணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென
வீசி யோயே வியலிடங் கமழ
இவணிசை யுடையோர்க் கல்ல தவண
15. துயர்நிலை யுலகத் துறையு ளின்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசினீ யீங்கிது செயலே. (50)

     திணை: அது. துறை: இயன்மொழி. சேரமான் தகடூரெறிந்த
பெருஞ்சேர லிரும்பொறை முரசு கட்டி லறியா தேறிய மோசிகீரனைத்
தவறு செய்யாது, அவன் துயிலெழுந்துணையும் கவரி கொண்டு
வீசீயானை மோசிகீரனார் பாடியது.

     உரை: மாசற விசித்த - குற்றந் தீர வலித்துப் பிணித்த;
வார்புறுவள்பின் - வாரப்பட்ட வாரையுடைய; மைபடு மருங்குல்
பொலிய - கருமரத்தாற் செய்தலான் இருட்சி பொருந்திய பக்கம்
பொலிவு பெற; மஞ்ஞை ஒலி நெடும் பீலி ஒண் பொறி - மயிலினது
தழைத்த நெடிய பீலியால் தொடுக்கப்பட்ட ஒள்ளிய பொறியை
யுடைத்தாகிய; மணித் தார் - நீல மணிபோலும் நிறத்தையுடைய
தாரை; பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டி -
பொற்றளிரையுடைய உழிஞையுடனே பொலியச் சூட்டப்பட்டு; குருதி
வேட்கை உரு கெழு முரசம் - குருதிப் பலிகொள்ளும்
விருப்பத்தையுடைய உட்குப் பொருந்திய வீரமுரசம்; மண்ணி வாரா
அளவை - நீராடி வருவதன் முன்னே; எண்ணெய் நுரை முகந்
தன்ன மென்பூஞ் சேக்கை - எண்ணெயினது நுரையை முகந்தாற்
போன்ற மெல்லிய பூவையுடைய கட்டிலின்கண்ணே; அறியா தேறிய
என்னை - இதனை முரசு கட்டிலென்ப தறியாது ஏறிக் கிடந்த
என்னை; தெறு வர இருபாற் படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை
- வெகுட்சி தோன்றஇரு கூறாக்கும் நின்னுடைய வாளை வாயை
மாற்றியதாகிய; அதூஉம் சாலும் - அதுவும் அமையும்; நல் தமிழ்
முழு தறிதல் - நல்ல தமிழ் முழுதும் அறிந்தமைக்கு; அதனொடும்
அமையாது - அவ் வெகுட்சி யொழிந்து அதனாலும் அமையாதே;
அணுக வந்து - குறுக வந்து; நின் மதனுடை முழவுத் தோள் ஓச்சி
- நினது வலியையுடைய முழவுபோலும் தோளை யெடுத்து;
தண்ணென வீசியோய் - சாமரத்தாற் குளிர வீசினாய்; வியலிடம்
கமழ - இவ் வகன்ற உலகத்தின்கண்ணே பரக்கும் பரிசு; இவண்
இசை யுடையோர்க் கல்லது - இவ் வுலகத்துப் புகழுடையோர்க்
கல்லது; அவணது - அவ்விடத்தாகிய; உயர் நிலை உலகத்துறையுள்
இன்மை - உயர்ந்த நிலைமையுடைய உலகத்தின் கண்
உறைதலில்லாமையை; விளங்கக் கேட்ட மாறு கொல் - தெரியக்
கேட்ட பரிசாலேயோ; வலம் படு குருசில் - வெற்றி பொருந்தப்பட்ட
தலைவர்; நீ ஈங்கு இது செயல் -நீ இவ்விடத்து இச் சாமரையை
வீசுதல், அதற்குக் காரணம் சொல்லுவாயாக எ-று.

     சூட்டி யென்பதனைச் சூட்ட வென்று திரிப்பினு மமையும்.
உழிஞை, கொற்றான்; அது குட நாட்டார் வழக்கு முழவுத்தோளோச்சி
யெனவும் தண்ணென வீசியோ யெனவும் கூறியவாற்றால் சாமரை
யென்பது பெற்றாம். கமழ்தல். ஈண்டுப் பரத்தற்பொருட்டாய் நின்றது.
தமிழென்பதற்குத் தமிழ்நாடெனினுமமையும்.

     குருசில், நீ இது செய்தல், இசையுடையோர்க் கல்லது உறையுனின்மை
விளங்கக்   கேட்ட   மாறுகொல்  எனக்    கூட்டுக.   எண்ணென்பது
கருத்தெனவுமாம். எண்ணி யென்று பாடமாயின் கருதி யென்க.

     விளக்கம்: மைபடு மருங்குல் என்புழி மருங்குல் பக்க மாதலால்,
மைபடு பக்க மெனக் கொண்டார்; மை, கருமை. இதற்குக் காரணம்
கருமரத்தாற் செய்யப்பட்டது என்கின்றார். பொலங் குழை யுழிஞை,
பொன்னாற் செய்யப்பட்ட உழிஞை யென்றும், குழை யென்பது அதற்கு
அடையென்றும் கொள்ளலாம். பொற்றளிரையுடைய உழிஞை யென்பர்
உரைகாரர். உழிஞைப்பூ பொன்னிறமுடையது. முரசுறை கடவுட்குக் குருதிப்
பலி தருதல் மரபாதலால், “குருதி வேட்கை யுருகெழு முரசம்” என்றார்.
தெறுதல், வெகுளுதல், சாமரை வீசுவது தண்ணென்ற காற்றெழுப்புங்
குறிப்பினாலாதலால், “தண்ணென வீசியோய்” என்றார். வெகுட்சியால்
வெம்மை செய்தற்குரிய நீ, சாமரையால் தண்ணென வீசினாய் என்பதாம்.
இம்மையிற் புகழுடையோர்க் கல்லது மறுமைக்கண் துறக்கவாழ் வில்லை
யென்பதுபற்றி, “இவணிசை யுடையோர்க் கல்லது அவணது உயர்நிலை
யுலகத் துறையுள்” இல்லை யென்பது ஈண்டுக் கூறப்படுகிறது. தமிழ் முழுதும்
என்றது, இய லிசை நாடக மென்ற முத்தமிழையும் குறித்து நின்றது. தமிழ்
நாடு முழுவதும் என்று கூறலும் பொருந்தும் என்றற்குத் “தமிழென்பதற்குத்
தமிழ் நாடெனினு மமையும்” என்றார். தண்ணென வென்பதற்கு வேறாக,
எண்ணென வென்றும் எண்ணி யென்றும் பாடமுண்டு. அக்காலை,
“எண்ணென்பது கருத்தெனவுமாம்; எண்ணி யென்று பாடமாயின் கருதி
யென்க” என்று கூறுக வென்றார்.