60. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் இவ்வளவனை உறையூரிடத்தே யிருந்த மருத்துவன் தாமோதரனார் இப் பாட்டின்கண் பாராட்டுகின்றார். இவன் தன் காலத்தேயிருந்த பாண்டி வேந்தனோடு நட்புற்றுச் சேரனது பகைமையை வென்று புகழ் மேம்பட்டிருக்கையில், சான்றோர் பலரும் இவனைப் பாடிப் பாராட்டி யிருக்கின்றனர். நாட்டிற் குண்டாகும் குறை பலவும் போக்கி அதனைக் காக்கும் வகையில் பெருமுயற்சியும் பேருழைப்பு முடையனாய் இருந்த இவனது இயல்பை இப் பாட்டின்கண், கானற் கழியுப்பு முகந்து கல்நாடு மடுக்கும், ஆரைச் சாகாட்டாழ்ச்சி போக்கும், உரனுடை நோன்பகட்டன்ன, எங்கோன் என்பதனால் தாமோதரனார் சிறப்பிக்கின்றார்.
தாமோதரனார் என்னும் சான்றோர் உறையூரின்கண் மருத்துவத் தொழில் புரிந்திருந்தவர். இனிய செய்யுள் செய்வதில் சிறந்தவர். இவரும் சேரமான் தானைத் தலைவன் பிட்டங்கொற்றனால் பெருஞ் சிறப்புச் செய்யப்பெற்றவர். இவர் இவ் வளவனைப் போலப் பிட்டங்கொற்றனையும் அழகு திகழப் பாடியுள்ளார். மலைகெழு நாடன் கூர்வேற் பிட்டனைக் குறுக லோம்புமின் தெவ்விர் என்றும், அவன் நசைவர்க்கு மென்மையல்லது பகைவர்க்கு உலைக்கல் லன்ன வல்லாளன் என்றும் கொற்றனது வன்மையும் வண்மையும் ஒருங்கு விளங்கப் பாடியிருக்கின்றார். | முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச் செம்மீ னிமைக்கு மாக விசும்பின் உச்சி நின்ற வுவவுமதி கண்டு கட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்த | 5. | சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து | | தொழுதன மல்லமோ பலவே கானற் கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும் ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும் உரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன் | 10. | வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன் | | வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின் மாலை வெண்குடை யொக்குமா லெனவே. (60) |
திணை: அது. துறை: குடை மங்கலம். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
உரை: முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல - கடனடுவே தோன்றுகின்ற திமிலின்கண் இடப்பட்ட விளக்குப் போல; செம் மீன் இமைக்கும் - செவ்வாய் மீன் விளங்கும்; மாக விசும்பின் உச்சி நின்ற உவவு மதி கண்டு - மாகமாகிய விசும்பினது உச்சிக்கண்ணே நின்ற உவா நாளின் மதியத்தைக் கண்டு; கட்சி மஞ்ஞையின் - காட்டுள் வாழும் மயிலைப்போல; சுர முதல் சேர்ந்த சில் வளை விறலியும் யானும் - சுரத்திடைப் பொருந்திய சிலவாகிய வளையையுடைய விறலியும் யானும்; வல் விரைந்து தொழுதனம் அல்லமோ பலவே - கடிதின் விரைந்து தொழுதே மல்லேமோ பலகால்; கானல் கழியுப்பு முகந்து கல் நாடு மடுக்கும் - கடற்கரையிடத்துக் கழியினீரான் விளைந்த உப்பை முகந்து கொண்டு மலைநாட்டை நோக்கிச் செல்கின்ற; ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் - ஆரையுடைய சகடையினது குழிப்பாய் தலைத் தீர்த்துச் செலுத்தும்; உரன் உடை நோன் பகட்டன்ன எங்கோன் - வலியையுடைய பாரம் பொறுக்கும் பகட்டை யொக்கும் எங் கோன்; வலன் இரங்கு முரசின் - வென்றியாக முழங்கும் முரசினையும்; வாய் வாள் வளவன் - தப்பாத வாளினையுமுடைய வளவனது; வெயில் மறைக் கொண்ட - வெயிலை மறைத்தற் கெடுத்த; உரு கெழு சிறப்பின் மாலை வெண் குடை ஒக்குமால் என - உட்குப் பொருந்திய தலைமையையுடைய தாமம் பொருந்திய வெண்கொற்றக் குடையை யொக்குமெனக் கருதி எ-று.
செம்மீ னிமைக்கும் விசும்பின் உச்சிநின்ற மதியை உவமித்தமையின், இது தலைப்பெய லுவமையாய் நின்றது; கானல்: கடற்கரை. வெயி லன்றது, பகைவரானும் கொடியோரானும் வரும் வெம்மையை. இராச்சிய பாரத்தைப் பொறுத்து நடத்துமாறு நோக்கி, நோன்பகட்டோடுவமித்தமையின், இறப்ப விழிந்த ஆனந்த வுவமையன் றாயிற்று உவாமதியைக் கண்டு வளவன் வெண்குடையை யொக்கு வினை முடிவு செய்க. வளவன் வெண்குடையைக் காட்டித் தொழுமின் என்றார்க்கு நிறைமதி தொழப்படாதாயினும் குடையோடு ஒப்புமை கண்டு தொழுத யாம் குடை தன்னைக் கண்டால் தொழுதல் சொல்ல வேண்டுமோ வென அதன் சிறப்புக்கூறியவாறு. செம்மீன்-திருவாதிரையுமாம். விளக்கம்: கடலிற் செல்லும் திமிலின்கண் இரவுக் காலங்களில் விளங்கேற்றுதல் மரபாதலால், அவ்விளக்கு வானத்தில் இரவில் விளங்கும் செவ்வாய் மீனுக்கு உவமமாயிற்று. முழுத்திங்கள் தொழப்படாதாயினும் தொழுதமை தோன்ற, வல் விரைந் தென்றார். கல்நாடு - மலைநாடு. ஆழ்ச்சி - குழிகளில் சகடம் புதைந்து ஆழ்தல். மறைக் கொண்ட என்புழி, மறை முதனிலைத் தொழிற்பெயர். நான்கனுருபு விரித்து மறைத்தற்குக் கொண்ட என உரை கூறப்பட்டது. உயர்ந்த பொருட்கு மிகத் தாழ்ந்த தொன்றையுவ மித்தல் இறப்ப விழிந்த ஆனந்த வுவமை யென்னும் குற்றமாம். அரசியற் பொறையைத் தாங்கிப் பகைக்கூழள்ளற்படாது உய்க்கும் வேந்தற்கு நோன்பகடு சிறந்த வுவமையாதலின், இது குற்றமன் றென்பதாம். |