136. வேள் ஆய் அண்டிரன் துறையூர் என்பது காவிரிக் கரைக்கண் உள்ளதோ ரூர். இவ்வூரில் ஓடை கிழார் என்னும் சான்றோர் வாழ்ந்தனர். இவர் வறுமை மிக்குப் பொதியின்மலைக் கிழவனாகிய ஆய் அண்டிரனைப் பாடிப் பரிசில் பெறக் கருதி, அவனது ஆய் குடிக்குச் சென்று அவனைக் கண்டார். அப்போது அவர் தமது வறுமைத் துன்பத்தை இப் பாட்டில் அமைத்து, வேந்தே, என் உடையிலுள்ள தையலில் வாழும் சீலைப்பேன் ஒருபால் என்னைப் பகைத்துத் துன்புறுத்துகிறது; உணவின்றி வருந்தும் என் சுற்றத்தோடு என்னை வருத்தும் பசிநோய் ஒருசார் துன்புறுத்துகிறது; எவரிடத்தேனும் பரிசில் பெற்றுச் செல்லின், வழியில் ஆறலைத்து அதனையும் பறித்துக்கொள்ளும் கள்வரது அச்சம் ஒருமருங்கு வருத்தத்தைச் செய்கிறது. இத் துன்பங்களனைத்தையும் போக்கி எம்மை அருளவல்லவன் ஆய் அண்டிரன் என்று கேட்டு அவன் புகழை விரும்பியாங்கள் நெடுஞ்சுரங் கடந்து வந்துள்ளோம். எங்கட்கு ஈபவரே ஒரு பயனும் கருதாது பிறர்க்கு ஈபவராவர்; ஒரு பயன் கருதிப் பிறர்க்கீபவர் தமக்கே ஈபவராவர்; இவ்வளவே யான் சொல்வேனாக, நீ நின் தகுதிக்கேற்ப வேண்டுவன வழங்குக. யாங்கள் அப் பரிசிலைக்கொண்டு எம துறையூரின்கண்ணே யிருந்து உண்டு மகிழ்ந்து, எம்மூர்த் துறையிடத்து மணலினும் பல யாண்டு நீ வாழ்வாயாக என வாழ்த்தி மகிழ்வோம் என்று பாடியுள்ளார். | யாழ்ப்பத்தர்ப் புறங்கடுப்ப இழைவலந்த பஃறுன்னத் திடைப்புரைப்பற்றிப் பிணிவிடாஅ ஈக்குழாத்தோ டிறைகூர்ந்த | 5 | பேஎற்பகையென வொன்றென்கோ | | உண்ணாமையி னூன்வாடித் தெண்ணீரிற் கண்மல்கிக் கசிவுற்றவென் பல்கிளையொடு பசியலைக்கும் பகையொன்றென்கோ | 10 | அன்னதன்மையு மறிந்தீயார் | | நின்னதுதாவென நிலைதளர மரம்பிறங்கிய நளிச்சிலம்பிற் குரங்கன்னபுன் குறுங்கூளியர் பரந்தலைக்கும் பகையொன்றென்கோ | 15 | ஆஅங், கெனைப்பகையு மறியுநனாய் | | எனக்கருதிப் பெயரேத்தி வாயாரநின் னிசைநம்பிச் சுடர்சுட்ட சுரத்தேறி இவண்வந்த பெருநசையேம் | 20 | எமக்கீவோர் பிறர்க்கீவோர் | | பிறர்க்கீவோர் தமக்கீபவென அனைத்துரைத்தனன் யானாக நினக்கொத்தது நீநாடி நல்கினை விடுமதி பரிசி லல்கலும் | 25 | தண்புனல் வாயிற் றுறையூர் முன்றுறை | | நுண்பல மணலினு மேத்தி உண்குவம் பெருமநீ நல்கிய வளனே. (136) |
திணை : அது. துறை : பரிசில்கடாநிலை. அவனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது.
உரை : யாழ்ப் பத்தர் புறம் கடுப்ப - யாழ்ப் பத்தரினது புறத்தை யொப்ப; இழை வலந்த பல் துன்னத்து - இழை சூழ்ந்த பல தையலினது; இடைப் புரை பற்றி - இடைக்கண் உளவாகிய புரைகளைப் பற்றி; பிணிவிடாஅ ஈர்க் குழாத்தோடு - ஒன்றோடொன்று தொடர்ந்த பிணிப்பு விடாதே கிடைக்கின்ற ஈரினது திரளோடு; இறை கூர்ந்த பேஎன் பகையென ஒன்று என்கோ - தங்குதல் மிக்க பேனாகிய பகையை ஒரு பகை யென்பேனோ; உண்ணாமையின் ஊன் வாடி - உண்ணாமையின் உடம்பு புலர்ந்து; கண் தெண்ணீரின் மல்கி - கண் தெளிந்த நீரால் நிறைந்து;கசிவுற்ற என் பல் கிளையொடு - வியர்ப்புற்ற எனது பல சுற்றத்தோடு; பசி அலைக்கும் பகை ஒன்றென்கோ - பசிநோய் வருத்தும் பகையை ஒரு பகை யென்பேனோ; அன்ன தன்மையும் அறிந்தீயார் - அப்பெற்றிப்பட்ட எனதியல்பையும் அறியாராய்; நின்னது தா என - நின் கைப்பொருளைத் தாவென்று சொல்லி; நிலை தளர - எம்முடைய நிலைகள் தளரும்படி; மரம் பிறங்கிய நளிச் சிலம்பின் - மரங்கள் செறிந்த குளிர்ந்த மலையில்; குரங்கன்ன புன் குறுங் கூளியர் - குரங்கு போலப் பறித்துக்கொள்ளும் இயல்பையுடைய புல்லிய குறிய ஆறலை கள்வர்; பரந் தலைக்கும் பகை ஒன்றென்கோ - பரந்து வந்தலைக்கும் பகையை ஒரு பகையென்பேனோ; எனைப் பகையும் அறியுநன் ஆய் எனக் கருதி- எல்லாப் பகையும் அறிவான் ஆயே எனக் கருதி; வாயாரப் பெயரேத்தி - எமது வாக்கினால் மிகவும் நினது பெயரை வாழ்த்தி; நின் இசை நம்பி - நின்னுடைய புகழை நச்சி; சுடர் சுட்டசுரத்து ஏறி - ஞாயிறு சுடப்பட்ட கரத்தின் கண்ணே யேறி; இவண் வந்த பெருநசையேம் - இவ்விடத்து வந்த பெரிய நச்சுதலை யுடையேம்; எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர் - இங்ஙனம் வறுமையுற்ற எங்களுக்கு ஒன்றை இடுவோ ரன்றோ பயன் கருதாது பிறர்க்கு இடுபவர்களாவாரெனவும், பிறர்க் கீவோர் தமக்கு ஈப வென - எம்மை யொழிந்த பிறர்க்கிடுவாரன்றோ பயன் கருதி யிடுதலால் தங்களுக்கே இடுவோ ரெனவும்; அனைத்து யான் உரைத்தனன் ஆக - அவ்வளவாக யான் சொன்னேனாக; நினக் கொத்தது நீ நாடி - நினக்குப் பொருந்தியது நீ ஆராய்ந்து; பரிசில் நல்கினை விடுமதி - எமக்குப் பரிசில் தந்தனையாய் விடுவாயாக; அல்கலும் - நாடோறும்; தண் புனல் வாயில் துறையூர் முன்றுறை - குளிர்ந்த நீரோடும் வாய்த்தலைகளையுடைய துறையூரின்கண் துறை முன்னர்; நுண் பல மணலினும் ஏத்தி - நுண்ணிய பல மணலினும் பல நாள் வாழ்க வெனவாழ்த்தி; உண்குவம் - உண்பேம்; பெரும-; நீ நல்கிய வளன் - நீ தந்த செல்வத்தை எ-று.
பெரும, நீ நல்கிய வளத்தை அல்கலும் ஏத்தி உண்பேம்; நினக் கொத்தது நீ நாடிப் பரிசில் நல்கினை விடுமதி யெனக் கூட்டுக.
ஆ யென வென்பதற்கு ஆ யென்று சொல்லவென்றும், எமக்கீவோர் பிறர்க் கீவோர் என்பதற்கு, எமக் கீவோர் எம் வறுமை கண்டு வருத்தமுறுவோர் யாவர்க்கும் ஈவோ ரெனவும், பிறர்க் கீவோர் தமக்கீப வென்பதற்குப் பிறர்க்குக் கொடுப்போர் அக் கொடுக்கப்படுகின்றோர் தமக்கே கொடுப்போராவ ரெனவு முரைப்பாரு முளர். கசிவுற்ற வென்பதற்கு இரக்கமுற்ற வெனினு மமையும். பேஎற் பகையென வென்புழி எனவும், ஆங்கெனைப் பகையு மென்புழி ஆங்கும் அசைநிலை. கண் தெண்ணீரின் மல்கி யெனவும் வாயாரப் பெயரேத்தி யெனவும் மாற்றப்பட்டன. விளக்கம் : உண்ணாமையால் உடல் வாடுதலும் வியர்த்தலும் இயல்பாதலின், ஊன்வாடிக் கசிவுற்ற என் பல்கிளை யென்றார். ஆறலைக் கள்வர் மலைகளில் குரங்குபோல மறைந்திருந்து வழப்பறி செய்வது தோன்ற, குரங் கன்ன புன்குறுங் கூளியர் பரந்தலைக்கும் பகை யென்றார். துறையூர் தமதூராதலின், அதனையே விதந்தோதுகின்றார். |