| 155. கொண்கானங் கிழான்      கொண்கானங் கிழானது வண்மைநலத்தைப் பெற்று இன்புற்ற மோசிகீரனார் இப் பாட்டின்கண் அவன் பாணர் கூட்டத்துக்கு
 வேண்டுவன நிரம்ப நல்கி அவரது வறுமையைப் போக்கி யாதரிக்கும்
 சிறப்பினைப் பாணாற்றுப்படை வாயிலாக வற்புறுத்துகின்றார்.
 |  | வணர்கோட்டுச்             சீறியாழ் வாடுபுடைத் தழீஇ உணர்வோர் யாரென் னிடும்பை தீர்க்கெனக்
 கிளக்கும் பாண கேளினி நயத்திற்
 பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ
 |  | 5 | ஏர்தரு             சுடரி னெதிர்கொண் டாஅங் |  |  | கிலம்படு             புலவர் மண்டை விளங்குபுகழ்க் கொண்பெருங் கானத்துக் கிழவன்
 தண்டா ரகல நோக்கின மலர்ந்தே.     (155)
 | 
               திணை: அது. துறை: பாணாற்றுப்படை. அவனை         அவர் பாடியது.
 
 உரை: வாணர் கோட்டுச் சீறி யாழ் வாடு புடைத்த         தழீஇ -
 வளைந்த கோட்டையுடைய சிறிய யாழை உலர்ந்த மருங்கிலே
 தழுவிக்கொண்டு; உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என -
 அறிவோர் யார்தாம் எனது துன்பத்தைத் தீர்க்க வென்று; நயத்தின்
 கிளக்கும் பாண - நயத்திற் சொல்லும் பாண; இனி கேள் - யான்
 சொல்லுகின்றதனை இப்பொழுது கேட்பாயாக; பாழ் ஊர் நெருஞ்சிப்
 பசலை வான் பூ - பாழூரின்கண் நெருஞ்சியினது பொன்னிறத்தை
 யுடைய வாலிய பூ; ஏர் தரு சுடரின் எதிர் கொண் டாஅங்கு -
 எழுகின்ற ஞாயிற்றை எதிர்கொண்டாற் போல; இலம்படு புலவர்
 மண்டை - வறுமையுற்ற யாழ்ப் புலவரது ஏற்கும் மண்டை; விளங்கு
 புகழ்க் கொண்பெருங் கானத்துக் கிழவன் - விளங்கிய புகழையுடைய
 கொண்கானங் கிழானது; தண் தார் அகலம் மலர்ந்து நோக்கின -
 குளிர்ந்த தாரையுடைய மார்பத்தை மலர்ந்து நோக்கின எ-று.
 
 ஏர் தரு சுடரி னெதிர்கொண்டாங் கென்புழி, இன், சாரியை; அது
 தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண் வந்தது; அன்றி, ஐகாரம் விகாரத்தால்
 தொக்க தெனினு மமையும். நயத்திற் கிளக்கும் பாண வென வியையும்;
 நயத்தின் அகலம் நோக்கின வென இயைப்பினு மமையும்.
 
 மண்டை அகலம் நோக்கி மலர்ந்த வென்ற கருத்து, கொடுக்கும்
 பொருள் மார்பின் வலியால் உளதாமாகலின், அகல நோக்கின
 வென்றதாகக் கொள்க.
 
 விளக்கம்: வணர் - வளைவு. வாடு         புடை - வறுமையால் வாடிய
 இடை; இதனை உலர்ந்த மருங்கென்றார் உரைகாரர்.பாணனாகிய
 எனக்கீவோர், முத்தமிழின்         ஒரு பகுதியாகிய இசைத்தமிழ்
 வளர்ச்சிக்கு ஈவோராவர் என்பதனை யுணர்வோர் என்னை வறுமைத் துயர்
 வருத்தவிடார்என்று பாணன் கூறுகின்றா னென்பார், உணர்வோர் யாரென்
 இடும்பை தீர்க்கென நயத்திற் கிளக்கும் பாணஎன்றார். சீர்த்த சிலவாய
 சொற்களால் கேட்போர் உளங்கொள்ளத் தக்க வகையில் இனிது கூறுதல்
 நயத்திற் கிளத்தல்என்றார். நெருஞ்சிப்பூ ஞாயிற்றை நோக்கி
 நிற்குமென்பதை, வானிடைச் சுடரொடு திரிதரு நெருஞ்சி(அகம்.336)
 என்று பிறரும் கூறுப. சுடரென்ற விடத்து ஐயுருபு தொக்கதனால் தோற்றம்
 வேண்டாத் தொகுதியாயிற்று. இத்தொகைக்கண், சாரியை (தொல்.எழுத்து.
 புணரி.30) வேண்டு மென்றலின், இன் சாரியை வந்தது. ஐயுருபு தொக்கதற்கு
 அமைதி கூறலுற்று ஐகாரம் விகாரத்தால் தொக்க தெனினு மமையும்
 என்றார். தண்டாரகலம் நோக்குமிடத்து அதன் அகலமும் வலியும்
 தாளாண்மையாற் பொருளீட்டும் குறிப்பை வற்புறுத்தலின், அகலம் நோக்கி
 மண்டை மலர்ந்த தென்றார். உரைகாரரும் மண்டை......கொள்கஎன்றார்.
 |