| 78.                  தலையாலங்கானத்துச் செருவென்ற      பாண்டியன்நெடுஞ்செழியன்
      தலையாலங்கானத்துச் செருவில் பாண்டியன் நெடுஞ்செழியனைப்போரெதிர்ந்த பகைவேந்தர் எழுவர் மேற்கொண்டு போந்த கொள்கை
 சீரிதன்மையால் அவர் கெட்டனர் என்பார் போல இப் பாட்டின்கண்
 இடைக்குன்றூர் கிழார், எம் இறைவனான நெடுஞ்செழியனது மலைத்தற்கரிய
 மார்பினை மதியாது யாமே விழுமியம், பெரியம்; நம்மொடு பொரும் இவனும்
 இளையன், கொள்ளத்தக்க கொள்ளையும் பெரிது, என இகழ்ந்த கருத்துடன்
 வந்தனர்; அவர் புறங்கொடுத் தோடுமாறு வென்றதனோடமையாத எங்கள்
 இறைவனான செழியன் அவர்தம் மகளிர் நாணமுற்று உயிர் விடுமாறு
 அவர்கட்குத் தொன்றுதொட்டுரியவாகிய ஊர்கட்கும் சென்று ஆங்கே அவ்
 வேந்தர்களைக் கொன்றழித்தான் என்று பாடிக் காட்டுகின்றார்.
 |  | வணங்குதொடைப்             பொலிந்த வலிகெழு நோன்றாள் அணங்கருங் கடுந்திற லென்னை முணங்குநிமிர்ந்
 தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன
 மலைப்பரு மகல மதியார் சிலைத்தெழுந்து
 |  | 5. | விழுமியம்             பெரியம் யாமே நம்மிற் |  |  | பொருநனு             மிளையன் கொண்டியும் பெரிதென எள்ளி வந்த வம்ப மள்ளர்
 புல்லென் கண்ணர் புறத்திற் பெயர
 ஈண்டவ ரடுதலு மொல்லா னாண்டவர்
 |  | 10. | மாணிழை             மகளிர் நாணினர் கழியத் |  |  | தந்தை             தம்மூ ராங்கண் தெண்கிணை கறங்கச்சென் றாண்டட் டனனே.            (78)
 | 
      திணையும்         துறையு மவை. அவனை அவர் பாடியது.
 உரை: வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன்றாள் -
 வளைந்த சந்துகளாற் பொலிந்த வலி பொருந்திய போரின் கண் நிலை
 தளராத பொறையினையுடைய தாளினையும்; அணங்கருங் கடுந் திறல் -
 வருத்துதற்கரிய மிக்க வலியையுமுடைய; என்னை - என் இறைவன்;
 அளைச் செறி உழுவை இரைக்கு முணங்கு நிமிர்ந்து வந்தன்ன -
 முழையின்கட் கிடந்த புலி தான் விரும்பியதோர் இரையை நோக்கி
 மூரிநிமிர்ந்து வந்தாற்போன்ற; மலைப்பரும் அகலம் - மாறுபடுதற்கரிய
 மார்பத்தை; மதியார் சிலைத்து எழுந்து - மதியாராய் ஆர்த்து
 எழுந்திருந்து; விழுமியம் பெரியம் யாம் - சிறப்புடையேம் படையாற்
 பெரியேம் யாங்கள்; நம்மிற் பொருநனும் இளையன் - நம்மிற்
 பொருவானும் இளையன்;      கொண்டியும் பெரிது         - கொள்ளையும் பெரிது;
 என எள்ளி வந்த வம்ப மள்ளர் - என இகழ்ந்து வந்த      நிலையில்லாத
 வீரர்; புல்லென் கண்ணர் புறத்திற் பெயர -      புற்கென்ற கண்ணராய்
 நின்றவிடத்து நில்லாதே புறத்தே போக; அவர்      ஈண்டு அடுதலும்
 ஒல்லான் - அவரை இப் போர்க்களத்தின் கண்ணே கொன்றிடுதலும்
 உடன்படானாய்; ஆண்டு - அவ்விடத்து; அவர் மாணிழை      மகளிர்
 நாணினர் கழிய - அவர் மாட்சிமைப்பட்ட ஆபரணத்தையுடைய      மகளிர்
 நாணினராய் இறந்துபட; தந்தை தம்மூர் ஆங்கண்-தந்தையருடையவாகிய
 தங்கள் ஊரிடத்து; தெண் கிணை கறங்கச் சென்று -      தெளிந்த
 போர்ப்பறை யொலிப்பச் சென்று; ஆண்டு அட்டனன் -      அவ்விடத்தே
 கொன்றான்        எ-று.
 
 தந்தை      தம்மூ ரென்றதனை, ஏவ லிளையர் தாய்வயிறு      கறிப்ப
 என்றாற்போலக் கொள்க.      தந்தை தம்மூ ரென்றது, தாம் தோற்றிச் செய்த
 நகரியன்றி உறையூரும் கருவூரும்      முதலாகிய ஊர்களை.
         விளக்கம்:       தாளில் அணிந்த வீரகண்டை இடையே தொடுக்கப்      பட்ட சந்துகளையுடையதாகலின், தொடை யென்றும்,      அதுதான் வளைவுடையதாதல்
 பற்றி, வணங்குதொடை      யென்றும் கூறினார். முணங்கு நிமிர்தல் - மூரி
 நிமிர்தல்;      அஃதாவது தூங்கி யெழுந்தவுடன் கைகளையும் உடம்பையும்      நீட்டித்
 திமிர்விட்டுச் சோம்பலைப்      போக்குதல். முன்பும், முணங்கு நிமிர் வயமான்
 (புறம்.52)      என்றது காண்க. மலைத்தல் - மாறுபட்டுப் பொருதல்.      ஆண்மையால்
 உளதாகும் சிறப்பினை யுடைமை      தோன்ற, விழுமியம் என்றார். வம்ப -
 மள்ளர் -      புதியராய் வரும் வீரர்; முன்பு வந்தோர் தோல்வியுற்      றொழிதலின்
 புதியர் புதியராய் வந்து      நீங்குதலின், நிலையில்லாத வீரர் என்றுரைத்தார்.
 தோல்வியால்      உளம் மழுங்கி ஒளியிழந்த கண்ணராதலின், புல்லென்
 கண்ணர்      என்றார். அவ்விடத் தென்புழி, அகரச் சுட்டுப்      பின்னர் வரும்
 தந்தை தம் மூரைக் குறிக்கும்.      இளையர் பலராயினும், ஒவ்வொருவரையும்
 பெற்ற      தாய் ஒருத்தி யாதலால் தாயென்றாற் போல, ஊர் ஒருமையாற்
 கூறப்பட்டது.
 |