23. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இப்பாட்டின்கண் ஆசிரியர் கல்லாடனார், இப் பாண்டியனுடைய படையிலுள்ள யானைகளாற் கலக்கப்பட்ட பகைவர் நாட்டு நீர்த் துறைகளையும், வில் வீரர் தாம் கொள்வது கொண்டு எஞ்சியவற்றை யழித்துப் பாழ் செய்த புலங்களையும், ஊர்தோறும் கடிமரம் தடியப்பட்ட மாக்களையும் எரி பரந்தெடுத்த இடங்களையும் கண்டு, இனியும் பகைமை செய்யும் பகைவர் நாட்டில் இன்ன பல செய்கைகளைச் செய்யும் துணிவேயுடையன் இப்பாண்டியன் என்று உட்கொண்டு ஆள் வழங்குதலின்றிப் பாழ்பட்ட காட்டு வழியே வருபவர் நின்னைக் கண்டனென் வருவலென உரைக்கின்றார். | வெளிறி னோன்காழ்ப் பணைநிலை முனைஇக் களிறுபடிந் துண்டெனக் கலங்கிய துறையும் கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியற் சூர்நவை முருகன் சுற்றத் தன்னநின் | 5. | கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர் | | கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில் கொள்பத மொழிய வீசிய புலனும் வடிநவி னவியம் பாய்தலி னூர்தொறும் கடிமரந் துளங்கிய காவு நெடுநகர் | 10. | வினைபுனை நல்லில் வெவ்வெரி யினைப்பக் | | கனையெரி யுரறிய மருங்கு நோக்கி நண்ணார் நாண நாடொறுந் தலைச்சென் றின்னு மின்னபல செய்குவன் யாவரும் துன்னல் போகிய துணிவி னோனென | 15. | ஞால நெளிய வீண்டிய வியன்படை | | ஆலங் கானத் தமர்கடந் தட்ட கால முன்பநிற் கண்டனென் வருவல் அறுமருப் பெறிகலை புலிப்பாற் பட்டெனச் சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை | 20. | பூளை நீடிய வெருவரு பறந்தலை | | வேளை வெண்பூக் கறிக்கும் ஆளி லத்த மாகிய காடே. (23) |
திணையும் துறையும் அவை. துறை: நல்லிசை வஞ்சியுமாம். பாண்டியனதலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனைக் கல்லாடனார் பாடியது. உரை: வெளிறில் நோன் காழ் பணை - வெண்மையில்லாத வலிய வயிரக் கம்பத்தையுடைய கூடத்தில்; நிலை முனைஇ - நிற்றலை வெறுத்துச் சென்று; களிறு படிந் துண்டென - யானை படிந்து நீருண்டதாக; கலங்கிய துறையும் - கலக்கமுற்ற துறையையும்; கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல் - கார்காலத்து நறிய கடம்பினது பசிய இலையோடு விரவிய மாலையையுடைய; சூர் நவை முருகன் சுற்றத் தன்ன - சூரபன் மாவைக் கொன்ற முருகனது கூளிச் சுற்றத்தை யொக்கும்; நின் கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் - நின்னுடைய கூரிய நல்ல அம்பினையும் வளைந்த வில்லினையுமுடைய மறவர்; கொள்வது கொண்டு - தம்மால் கொள்ளலாவதனை முகந்துகொண்டு; கொள்ளா மிச்சில் - கொள்ளாத ஒழி பொருளை; கொள்பதம் ஒழிய வீசிய புலனும் - மாற்றார் முகந்துகொள்ளப்படும் உணவாக்காமல் சிதறிய நிலங்களையும் - வடி நவில் நவியம் பாய்தலின் - வடித்தல் பயின்ற கோடாலி வெட்டுதலான்; ஊர் தொறும் கடிமரம் துளங்கியகாவும் - ஊர்தோறும் காவல் மரங்கள் நிலைகலங்கிய காவையும்; நெடு நகர் வினை புனை நல்லில் - நெடிய நகரின்கண் தொழில் புனைந்த நல்ல மனைகளிடத்து; வெவ் வெரி இனைப்ப - விரும்பும் அடு தீயைக் கெடுக்க; கனை எரி உரறிய மருங்கும் - மிக்க தீ முழங்கிய பக்கத்தையும்; நோக்கி - பார்த்து; நண்ணார் நாண - பகைவர் நாண; நாடொறும் தலைச் சென்று - நாடோறும் அவரிடத்துச் சென்று;இன்னும் இன்ன பல செய்குவன் - இன்னமும் இத்தன்மையான பலவும் செய்குவன்; யாவரும் துன்னல் போகிய துணிவினோன் - யாவரும் தன்னை யணுகவொண்ணாத சூழ்ச்சித் தெளிவினையுடையோன்; என - எனக் கருதி; ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை - உலகம் பொறை யாற்றாது நெளியத் திரண்ட பரந்த படையினையுடைய; ஆலங்கானத்து அமர் கடந் தட்ட கால முன்ப - தலையாலங்கானத்தின்கண் போரை யெதிர் நின்று கொன்ற காலன்போலும் வலியையுடையோய்;நிற்கண்டனென் வருவல் - நின்னைக் கண்டேனாய் வந்தேன்; அறு மருப்பு எழிற் கலை - அற்ற கோட்டையுடைய பெரிய கலை; புலிப்பாற் பட்டென - புலியின் கண்ணே யகப்பட்டதாக; சிறு மறி தழீஇய தெறி நடை மடப்பிணை - சிறிய மறியை யணைத்துக் கொண்ட துள்ளிய நடையையுடைய மெல்லிய மான்பிணை; பூளை நீடிய வெருவரு பறந் தலை - பூளை யோங்கிய அஞ்சத்தக்க பாழிடத்து; வேளை வெண்பூ கறிக்கும் - வேளையினது வெளிய பூவைத் தின்னும்; ஆளில் அத்தமாகிய காடு - ஆளற்ற அருஞ்சுரமாகிய காட்டு வழியே எ-று.
கால முன்ப, துறையும் புலனும் காவும் மருங்கும் நோக்கி, இன்னும் இன்ன பல செய்குவன் துணிவினோவென வுட் கொண்டு, காட்டின் கண்ணே நின்னைக் கண்டு, அக் காட்டுவழியே வந்தே னெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
வருவ லென்பது ஈண்டு இறந்தகாலப் பொருட்டாய் நின்றது. இவனைக் காணா முன்னே கண்டுவந்தே னென்றான், இவன் செய்த வென்றியெல்லாங் கண்டமையின். பாசிலைத் தெரியல் முருக னென வியையும். நவியம் பாய்த லென்பது கருவி கருத்தாவாய் நின்றது. கலை புலிப்பாற் பட்டெனச் சிறுமறி தழீஇய மடப்பிணை பறந்தலை வேளை வெண்பூக் கறிக்குமென்பது, அவன் பகைவரைக் கொன்றவழி அவர் பெண்டிர் தம் இளம் புதல்வரை ஓம்புதற்பொருட்டு இறந்து படாது அடகு தின்று உயிர் வாழ்கின்றா ரென்பதொரு பொருள் தோன்ற நின்றது.
இனி, துணிவினோ னென்று பிறர் சொல்ல வெனவும் கண்டனென் வருவ லென்பதனைக் காலமயக்கமாக்கிக் கலங்கிய துறை முதலாயினவற்றை நோக்கி இன்னும் இவ்வாறு பகைவர் நாட்டின்கண் மேற்செல்வனென நினைந்து காட்டிடத்தே நின்னைக் காணிய வந்தே னெனவும் உரைப்பாரு முளர்.
விளக்கம்: வெளிறு - வெண்மை; இன்மை யரிதே வெளிறு (குறள் 503) என்றாற் போல. புறத்தே வெளிறும் அகத்தே காழும். உடைய பணையன்று என்பதற்கு, வெளிறில் நோன்காழ்ப்பணைஎன்றார். கார்காலத்து மலர்ந்து மணங் கமழ்வது கடம்பு; இதுபற்றி, கார் நறுங்கடம்பு என்று கூறப்பட்டது; உரைகாரரும் கார்காலத்து நறிய கடம்பு என்றுரைத்தார். பகைவர் நாட்டுப் பொருளைக் கொள்ளை கொண்டு வரும் மறவர் தம்மாற் கொள்ளப்படாது ஒழிந்து நிற்கும் பொருள் பிறர் எவர்க்கும் பயன்படாவாறு, அவற்றை யழித்துச் சிதைப்பதும் விளைவயல்களை யழித்துவிடுவதும் பண்டைய போர் மரபு. இவ்விருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டாவது உலகப்போரிலும் இச் செயல்கள் நிகழ்ந்தனவாதலால், இஃது எக்காலத்துப் போர்க்கும் இயல்பு எனத் தெரிகிறது.மனைகளில் விருந்தோம்பல் முதலிய நற்செயல் குறித்த சோறடும் தீயை வெவ்வெரி யென்றார். தெறிநடை துள்ளி நடை. கண்டனென் வருவல் என்றது, காண்பேனாய் வந்தேன் என இறந்தகாலப் பொருளதாதலின், இறந்த கால......நின்ற தென்றார். செய் பொருளின் தோற்றம் செய்தோரைக் காண்போர் மனக் கண்ணிற் றோற்றுவித்தலின், செய்த வென்றியெல்லாங் கண்டமையின் என்றார் நவியமாகிய கருவி தானாகச் சென்று மரத்தை வெட்டாது; அதனைக் கையாள்வோன் செயலை அதன் செயலாக வைத்து, கருவி கருத்தாவாகக் கூறுதல் மரபு; இவ்வாள் நன்றாக அறுக்கும் என்பதுபோல. காணிய வந்தேன் என வுரைப்பதாயின், காண்பதற்காக வந்தேன் என அதற்குப் பொருள் கொள்க. |