பழைமை யெனப்படுவது யாது எனின்-பழைமையென்று சொல்லப்படுவது என்னது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு-அது பழைமையான நண்பர் தாம்விரும்பியவாறு செய்தற்குரிய உரிமையைச் சிறிதும் கெடுக்காத பொறைநட்பாம். உரிமையால் விரும்பியவாறு செய்வன: கீழ்வினைஞரா யிருந்து கருமஞ் செய்யுங்காற் கேளாது செய்தல், கேடாகச் செய்யினும் மனம் வருந்தாமை, தமக்கு வேண்டியவற்றைத் தாமே யெடுத்துக்கொள்ளுதல், பணிவும் அச்சமுமின்மை, வீட்டிற்குள் வந்து தாராளமாகப் பழகுதல் முதலியன. இத்தகைய வரம்பு கடந்த நடத்தையைப் பொறுத்துக் கொள்வதே பழமை என்றவாறு. "ஒருவர் பொறையிருவர் நட்பு." (நாலடி. 223) என்றதும் இது பற்றியே. 'பழைமை' ஆகுபெயர்.
|