வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

 

விருந்து ஒம்பி மிச்சில் மிசைவான் புலம்-முன்பு விருந்தினரை உண்பித்துவிட்டுப் பின்பு மீந்ததைத் தானுண்ணும் வேளாளனது நிலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ-விதை தெளித்தலும் வேண்டுமோ? வேண்டியதில்லை.

தானே விளையும் என்பது குறிப்பெச்சம். இஃது இக்காலத்திற்கு இன்மை நவிற்சியாகத் தோன்றலாம். வளமிக்க பண்டைக் காலத்தில், அறுவடை நாளில் வயலிற் சிந்திய மணிகள் களந்தூர்க்கப்படாமலே கிடந்து , அடுத்துப் பெய்த மழையால் முளைத்து வளர்ந்து விளைந்திருக்கலாம். இனி, இக்காலத்தும், வித்தையும் சமைத்து விருந்தினர்க்குப் படைத்த வேளாளனது நிலத்தில் அவனுக்குத் தெரியாமல் இரவோடிரவாக அறவாணனான செல்வன் தன் சொந்த வித்தை விதைக்கலாம்.

இனி, விருந்தோம்பி மிச்சில் மிசைவான்-விருந்தினரை யுண்பித்துப் பின் மீந்ததை யுண்ணும் இயல்புள்ள வேளாளன்; புலம் வித்து இடலும் வேண்டுமோ- விருந்தோம்பல் முட்டுப் பட்ட விடத்துத் தன் நிலத்தில் விதைக்கு வைத்திருந்ததை விதைக்கவும் விரும்புவானோ? விரும்பான் என்று வேறும் ஒரு பொருள் கொள்வர். இதற்கு இளையான்குடி மாற நாயனார் வரலாறு ஒர் எடுத்துக் காட்டாம்.

கொல் அசைநிலை. மிச்சில் அடுகலத்தில் அல்லது பெட்டியில் மிஞ்சுவது தூய்மையாயிருப்பது. எச்சில் உண்கலத்தில் அல்லது இலையில் எஞ்சுவது; எச்சிலோடு கூடியது. இவ்வேறுபாடறிக.