1082 பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையாற் பேரமர்க் கட்டு. பண்டு கூற்றின்வடிவு இன்னபெற்றித்தென்பதை அறியேன்: இப்பொழுது அறிந்தேன். அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களையுடைத்து. இது நம்மை வருத்தற்குத் தக்காளென்னுங் குறிப்பு. 2 1083 கண்டார் உயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப் பேதைக் கமர்த்தன கண். தம்மைக்கண்டவர்கள் உயிரையுண்ணும் தோற்றத்தாலே பெண் தகைமையையுடைய பேதைக்கு ஒத்தன கண்கள். அமர்தல் - மேவல். இது பேதையோடு ஒத்த தொழிலுடைத் தென்று கண்ணின் கொடுமையை யுட்கொண்டு கூறியது. 3 1084 கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர் செய்யல மன்னிவள் கண். வளைந்த புருவங்கள் தாம் செப்பமுடையனவாய் விலக்கினவாயின் இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா. இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவு கண்டு அவன் கூறியது. 4 1085 ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு. இவ்வொள்ளிய நுதற்கு மிகவுங் கெட்டது, போரின்கண் கிட்டாதாரும் உட்கும் எனது வலி. இது மேற்கூறிய தலைமகன் மிகவுங் கவிழ்ந்து நிலம்நோக்கிப் புருவத்தின் மேற்றோன்றிய தலைமகள் நுதல் கண்டு கூறியது. 5
|