பக்கம் எண் :

276

1115 மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று.

நெஞ்சே! நீ இவள்கண் மலராயினும் பலரால் காணப்படும் பூவையொக்கு மென்று மலரைக் கண்டபொழுதே மயங்கா நின்றாய்.

இது கண் பூவினது நிறமொக்குமாயினும் குணமொவ்வா தென்று கூறிற்று.

5

1116 காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வே மென்று.

குவளைமலர் காணவற்றாயின் மாட்சிமைப்பட்ட இழையினை யுடையாளது கண்ணை ஒவ்வோமென்று நாணி, கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

இது காணுந்தோறும் ஒவ்வாதென்றது.

6

1117 நன்னீரை வாழி யனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

அனிச்சப்பூவே! நீ நல்ல நீர்மையை யுடையாய்; எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மிக நீர்மையாள் காண்.

இஃது உடம்பினது மென்மை கூறிற்று.

7

1118 அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.

அனிச்சப்பூவைக் காம்புகள் அறாது மயிரில் அளைந்தாள்: இனி இவளது நுசுப்பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டா பறை.

இஃது இடையினது நுண்மை கூறிற்று.

8

1119 முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

தளிர்போலும் மேனி: முத்துப்போலும் முறுவல்: நறுநாற்றம் போலும் நாற்றம்: வேல்போலும் உண்கண்: வேயொத்த தோளினை யுடையாளுக்கு.

இது நிறமும், எயிறும், நாற்றமும், கண்ணின் வடிவும், தோளும் புகழ்ந்து கூறிற்று.

9