பக்கம் எண் :

290

1170 காமமும் நாணு முயிர்காவாத் தூங்குமென்
நோனா வுடம்பி னகத்து.

வேட்கையும் நாணமும் என்னுயிரே காத்தண்டாகத் தூங்கா நின்றன, பொறுக்கமாட்டாத என்னுடம்பினுள்ளே நின்று. (காத்தண்டாக- காவடித்தண்டாக: தூங்குதல்- தொங்குதல்)

இது தலைமகள் மனமகிழ்ச்சி யிதுவென்று கூறியது.

10

118. கண் விதுப்பழிதல்

கண் விதுப்பழிதலாவது கண் தனது விரைவினால் அழிந்தமை தலைமகள் தோழிக்குக் கூறுதல். பிரிவின்கண் துன்பமுற்றார்க்குக் கண்ணீர் முற்பாடு தோன்றுமாதலின் தனது ஆற்றாமையை ஒன்றன்மேலிட்டுக் கூறுவாள் அதனை முற்பாடு கண்ணின்மேலிட்டுக் கூறுதலால்,அதன்பின் இது கூறப்பட்டது.

1171 பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்.

விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ? நம்மைக் கண்டால் விருப்பமின்றிப்போன அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிரிவு முளவோ?

1

1172 கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது.

அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங்காட்டுதலானே யன்றே? பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி?

இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது.

2