125. நெஞ்சொடுகிளத்தல் நெஞ்சொடு கிளத்தலாவது நெஞ்சு முன்னிலையாகத் தலைமகள் சொல்லுதல். காதல் அடக்கல் ஆற்றாதார் பிறர்க்குச் சொல்லுதற்கு நாணித் தன் நெஞ்சிற்குச் சொல்லி ஆற்றுதலான், அதன்பின் கூறப்பட்டது. 1241 காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு. எனக்கு நல்லநெஞ்சே! ஒன்றிற் காமத்தை விடுதல் வேண்டும்: ஒன்றில் நாணத்தை விடுதல் வேண்டும்: யான் இவ்விரண்டினையுங்கூடப் பொறுத்தலரிது. இது பிரிவிடையாற்றாளாய்த் தலைமகனிருந்துழிச் செல்லக் கருதிய தலைமகள் நாணம் தடுத்தமை கண்டு கூறியது. 1 1242 துன்னார் துறந்தாரை நெஞ்சத் துடையேமால் இன்னு மிழத்துங் கவின். மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின் முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்; ஆதலான் மறத்தலே கருமம். ஈண்டு நெஞ்சென்றது மனத்துடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது. 2 1243 காத லவரில ராகநீ நோவது பேதமை வாழியென் னெஞ்சு. அவர் நம்மேற் காதலிலராக, என் நெஞ்சே! நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது பேதைமை. இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது. 3 |