1. தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். | அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
| 111 | |
2. செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. | நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியிலுள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
| 112 | |
3. நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். | தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவுநிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
| 113 | |
4. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும். | நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சிநிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
| 114 | |
5. கேடும் பெருக்கமும் இல்லல்ல: நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி. | கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
| 115 | |
6. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின். | தன் நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், `நான் கெடப்போகின்றேன்’ என்று ஒருவன் அறிய வேண்டும்.
| 116 | |
7. கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. | நடுவுநிலையாக நின்று அறநெறியில் நிலைத்து வாழ்கின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என்று கொள்ளாது உலகம்.
| 117 | |
8. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி. | முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர் தூக்கும் துலாக்கோல்போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
| 118 | |
9. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உள்கோட்டம் இன்மை பெறின். | உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லினும் கோணுதல் இல்லா திருத்தல் நடுவுநிலைமையாம்.
| 119 | |
10. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். | பிறர் பொருளையும் தம்பொருள்போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.
| 120 | |
|
|