1. அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண். | | அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
| 421 | | |
2. சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. | | மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும். | 422 | | |
3. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. | | எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
| 423 | | |
4. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. | | தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லித், தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும். | 424 | | |
5. உலகம் தழீஇயது ஒட்பம்: மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. | | உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.
| 425 | | |
6. எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு. | | உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
| 426 | | |
7. அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதுஅறி கல்லா தவர். | | அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
| 427 | | |
8. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை: அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். | | அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடைவரின் தொழிலாகும்.
| 428 | | |
9. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய். | | வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுஙகும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
| 429 | | |
10. அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். | | அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
| 430 | | |
|
|