பக்கம் எண் :

ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து.

 

ஒப்புரவினால் கேடு வரும் எனின் - ஒப்புரவினால் ஒருவனுக்குப் பொருட்கேடு வருமாயின்; விற்றுக்கோள் தக்கது உடைத்து - அக்கேடு ஒருவன் தன்னை விற்றாகிலுங் கொள்ளத்தக்க தகுதியுடையதாம்.

ஒப்புரவினால் வருங்கேடு, ஒருவராலும் பழிக்கப்படாமல் இவ்வுலகிற் புகழும் மறுமைக்கு அறமும் விளைத்தலால், ஒரு சிறந்த பேறேயன்றி இழப்பன்று என்பதாம். அப்பேற்றின் சிறப்பை மிகுத்துக் காட்டற்கே தன்னை விற்றுங் கொள்ளத்தக்க தென்றார்.

"களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடின் பனுவற் பாண ருய்த்தெனக்
களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை யரிய இழையணி மகளிரொடு
சாயின் றென்ப ஆஅய் கோயில்
சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில்
பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி
உரைசா லோங்குபுக ழொரீஇய
முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே".


என்னும் புறப்பாட்டு (127) ஆய்வள்ளல் ஒப்புரவினால் அடைந்த பொருட்கேட்டைத் தெரிவிப்பதாம்.