மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் -மாந்தருக்கு மனநன்மை ஒரு செல்வமாம்; இனநலம் எல்லாப் புகழும் தரும் - இன நன்மை எல்லா வகையிலும் புகழை உண்டாக்கும். மன் என்னும் சொல் மன்பதை என்பதிற்போல் மாந்தனைக் குறித்தது. இச்சொல்லின் வரலாறு முன்னரே கூறப்பட்டது. "மனத்துக்கண் மாசிலனாத லனைத்தறன்" (குறள். 34) என்றும், "அறத்தினூஉங் காக்கமுமில்லை" (குறள். 22) என்றும் முன்னரே கூறியிருத்தலால், "மனநலமன்னுயிர்க் காக்கம்" என்றும், இனநலமுடையார்க்குப் புகழ்க்கேதுவான செயலெல்லாம் வெற்றியாய் முடிதலின் ' எல்லாப் புகழுந்தரும்' என்றும் ; கூறினார். இதனாலும் இருவகைத் தூய்மையின் பயன்களும் கூறப்பட்டன.
|