எனை வகையான் தேறியக் கண்ணும் - எத்தனை வகையால் ஆராய்ந்து தெளிந்து வினைக்கு அமர்த்திய பின்பும் ; வினை வகையான் வேறு ஆகும் மாந்தர் பலர் - அவ்வினையின் தன்மையால் தன்மை வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலராவர். ஒரு தனிப்பட்ட கொள்கையுடைய அரசியற் கட்சித்தலைவர் ஆளுநராக அமர்த்தப்பெறின் , அக்கட்சிக் கொள்கையை விட்டு விடுவதும் , நேர்மையானவரென்று கருதப் பெற்றவர். வணிகத் துறையதிகாரியானபின் கையூட்டு வாங்குவதும், தலைமை யமைச்சராகவும் படைத்தலைவராகவும் அரசனால் அமர்த்தப் பெற்றவர் அதிகாரத்தைக் கைப்பற்றியபின் அரசனைக் கவிழ்த்து விட்டுத் தாம் அரசராவதும் , இன்று நிகழ்வது போன்றே அன்றும் நிகழ்ந்தமையின் , 'வினைவகையான் வேறாகு மாந்தர் பலர்' என்றார் . தேனை வழித்தவன் புறங்கையை நாவால் வழிப்பது போல , பொருளின் அதிகாரச்சுவை கண்டபின் அதன் ஆசையால் இழுப்புண்டு மனந்திரிவது பெரும்பால் மாந்த ரியல்பாதலால் , எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து அமர்த்திய வினைத்தலைவர் வினையையும் இறுதிவரையில் விழிப்பாக மேற்பார்த்து வருவதும் , சிறிது வேறு பட்டவிடத்தும் அவரை வினையினின்று விலக்கிவிடுவதும் , இன்றியமையாதன வென்பதாம்.
|