முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப்படின் - முறை (நீதி ) செய்யாத அரசனின் கொடுங்கோலாட்சியின் கீழ்வாழின் ; உடைமை இன்மையின் இன்னாது - இன்பந்தரவேண்டிய செல்வநிலை துன்பந்தரும் இயல்புள்ள வறுமையினும் துன்பமான தாம். உடல் வருந்தப் பாடுபட்டுத் தேடிய செல்வத்தைக் கொடுங் கோலரசன் எளிதாய்க் கேட்டமட்டிற் கொடாவிடின், சிறைகாவற்கும் நையப்புடைப்பிற்கும் மட்டுமன்றிக் கொலைத் தண்டத்திற்கும் ஆளாக நேருமாதலின் , இன்னாமையில் தன்னேரில்லா இன்மையும் கொடுங்கோல் நாட்டில் உடைமையின் இனிய தென்றார்.
|