பக்கம் எண் :

அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது.

 

அறவாழி அந்தணன் - அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்த அருளாளனுமாகிய இறைவனது; தாள் சேர்ந்தார்க் கல்லால் - திருவடியாகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது - அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின்பக் கடல்களைக் கடத்தல் இயலாததாகும்.

எல்லா அறங்களுந் தொக்கதொகுதி கடல்போற் பரந்ததாதலின், இறைவனை அறவாழியென்றார். பொருளின்பங்களைக் கடலாக வுருவகித்தமையால், அவற்றொடு தொடர்புள்ள அறவாழி என்பது அறக்கடலையன்றிப் புத்தனது தரும சக்கரத்தை யுணர்த்தாது, பிறவாழி கடவாமையாவது பொருளின்ப ஆசையுள் மூழ்கித் துன்புறுதல். இறைவனடி சேர்ந்தவர் அத்துன்பத்தினின்று நீங்கி என்றென்றும் பேரின்பத்தில் திளைப்பர் என்பதாம்.

அறம் பொருளின்பத்தை ஆழியென்றுருவகித்து இறைவன் திருவடியைப் புணையென்றுருவகியாது விட்டது, ஒருமருங்குருவகம்.