பக்கம் எண் :

திருக்குறள்83பொருள்

42. கேள்வி
 

411.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்

செல்வத்து ளெல்லாந் தலை.

 

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச்
செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.
 

412.

செவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

 

செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு
வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.
 

413.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

 

குறைந்த  உணவருந்தி  நிறைந்த  அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு
ஒப்பாகக்   கேள்வி    ஞானம்    எனும்  செவியுணவு    அருந்துவோர்
எண்ணப்படுவர்.
 

414.

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்

கொற்கத்தின் ஊற்றாந் துணை.

 

நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால்,
அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக
அமையும்.
 

415.

இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

 

வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம்
உடையவர்களின் அறிவுரையானது உதவும்.