பக்கம் எண் :

அரசியல்84கலைஞர் உரை

416.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.

 

நல்லவற்றை   எந்த   அளவுக்குக்  கேட்கிறோமோ அந்த அளவுக்குப்
பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
 

417.

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்

தீண்டிய கேள்வி யவர்.

 

எதையும்   நுணுகி   ஆராய்வதுடன்  கேள்வி அறிவும் உடையவர்கள்,
சிலவற்றைப்  பற்றித்   தவறாக   உணர்ந்திருந்தாலும்  கூட,  அப்போதும்
அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.
 

418.

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.

 

இயற்கையாகவே  கேட்கக்கூடிய   காதுகளாக   இருந்தாலும்   அவை
நல்லோர்  உரைகளைக்   கேட்க  மறுத்தால்  செவிட்டுக் காதுகள் என்றே
கூறப்படும்.
 

419.

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயின ராத லரிது.

 

தெளிவான   கேள்வியறிவு   இல்லாதவர்கள்,   அடக்கமாகப்  பேசும்
அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
 

420.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினு மென்.

 

செவிச்சுவை  உணராமல்  வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள்
உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.