| 416. | எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் |
| ஆன்ற பெருமை தரும். |
| |
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். |
| 417. | பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் |
| தீண்டிய கேள்வி யவர். |
| |
எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள். |
| 418. | கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் |
| தோட்கப் படாத செவி. |
| |
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும். |
| 419. | நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய |
| வாயின ராத லரிது. |
| |
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது. |
| 420. | செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் |
| அவியினும் வாழினு மென். |
| |
செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான். |