43. அறிவுடைமை |
421. | அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் |
| உள்ளழிக்க லாகா அரண். |
|
பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான். |
422. | சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ |
| நன்றின்பா லுய்ப்ப தறிவு. |
|
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும். |
423. | எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் |
| மெய்ப்பொருள் காண்ப தறிவு. |
|
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும். |
424. | எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் |
| நுண்பொருள் காண்ப தறிவு. |
|
நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துகளையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும். |
425. | உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங் |
| கூம்பலு மில்ல தறிவு. |
|
உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்புக்கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும். |