பக்கம் எண் :

திருக்குறள்85பொருள்

43. அறிவுடைமை
 

421.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.

 

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.
 

422.

சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ

நன்றின்பா லுய்ப்ப தறிவு.

 

மனம்  போகும்  வழியெல்லாம்  போக   விடாமல்   தீய வழிகளைத்
தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
 

423.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

 

எந்தவொரு   பொருள்குறித்து  எவர்   எதைச்  சொன்னாலும், அதை
அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து
தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
 

424.

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.

 

நாம்  சொல்ல  வேண்டியவைகளை எளிய   முறையில்  கேட்போரின்
இதயத்தில்    பதியுமாறு    சொல்லிப்    பிறர்   சொல்லும்  நுட்பமான
கருத்துகளையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.
 

425.

உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்

கூம்பலு மில்ல தறிவு.

 

உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்புக்கொண்டு
இன்பம்  துன்பம்  ஆகிய  இரண்டையும்  ஒரே  நிலையாகக்  கருதுவதே
அறிவுடைமையாகும்.