பக்கம் எண் :

அரசியல்86கலைஞர் உரை

426.

எவ்வ துறைவ துலக முலகத்தோ

டவ்வ துறைவ தறிவு.

 

உயர்ந்தோர்    வழியில்     உலகம்  எவ்வாறு   நடைபெறுகின்றதோ
அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.
 

427.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.

 

ஒரு      விளைவுக்கு      எதிர்விளைவு       எப்படியிருக்குமென
அறிவுடையவர்கள்தான்   சிந்திப்பார்கள்;   அறிவில்லாதவர்கள்  சிந்திக்க
மாட்டார்கள்.
 

428.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ

தஞ்சல் அறிவார் தொழில்

 

அறிவில்லாதவர்கள்தாம்  அஞ்ச  வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.
அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.
 

429.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.

 

வருமுன்  அறிந்து  காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி
தரக்கூடிய துன்பம் ஏற்படாது.
 

430.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனு மிலர்.

 

அறிவு  இல்லாதவர்களுக்கு  வேறு  எது இருந்தாலும் பெருமையில்லை;
அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.