பக்கம் எண் :

திருக்குறள்91பொருள்

46. சிற்றினம் சேராமை
 

451.

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும்.

 

பெரியோர்,  கீழ்மக்களின்  கூட்டத்தோடு  சேரமாட்டார்கள்.  ஆனால்
சிறியோர்களோ   இனம்  இனத்தோடு  சேருமென்பதுபோல்  அந்தக்  கீழ்
மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.
 

452.

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்

கினத்தியல்ப தாகும் அறிவு.

 

சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு  அந்த  நிலத்தின்
தன்மையை   அடைந்துவிடும்.  அதுபோல  மக்களின்   அறிவும், தாங்கள்
சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.
 

453.

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னா னெனப்படுஞ் சொல்.

 

ஒருவரின்   உணர்ச்சி, மனத்தைப்    பொறுத்து   அமையும்.   அவர்
இப்படிப்பட்டவர்   என்று    அளந்து   சொல்வது   அவர்  சேர்ந்திடும்
கூட்டத்தைப் பொருத்து அமையும்.
 

454.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்

கினத்துள தாகும் அறிவு.

 

ஒருவரின்   அறிவு   அவரது   மனத்தின்   இயல்பு  என்பது போல்
தோன்றினாலும், அது    அவர்   சேர்ந்த   கூட்டத்தாரின்   தொடர்பால்
வெளிப்படுவதேயாகும்.
 

455.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்.

 

ஒருவன்   கொண்டுள்ள  தொடர்பு   தூய்மையானதாக இருந்தால்தான்
அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.