48. வலியறிதல் |
471. | வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் |
| துணைவலியுந் தூக்கிச் செயல். |
|
செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும். |
472. | ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச் |
| செல்வார்க்குச் செல்லாத தில். |
|
ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை. |
473. | உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி |
| இடைக்கண் முரிந்தார் பலர். |
|
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு. |
474. | அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை |
| வியந்தான் விரைந்து கெடும். |
|
மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள். |
475. | பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் |
| சால மிகுத்துப் பெயின். |
|
மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும். |