பக்கம் எண் :

திருக்குறள்97பொருள்

49. காலமறிதல்
 

481.

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

 

பகல்  நேரமாக  இருந்தால்   கோட்டானைக்  காக்கை வென்று விடும்.
எனவே   எதிரியை   வீழ்த்துவதற்கு   ஏற்ற  காலத்தைத்  தேர்ந்தெடுக்க
வேண்டும்.
 

482.

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு.

 

காலம்   உணர்ந்து   அதற்கேற்பச்  செயல்படுதல், அந்த நற்செயலின்
வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.
 

483.

அருவினை யென்ப உளவோ கருவியாற்

கால மறிந்து செயின்.

 

தேவையான    சாதனங்களுடன்   உரிய    நேரத்தையும்    அறிந்து
செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.
 

484.

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்.

 

உரிய    காலத்தையும்     இடத்தையும்  ஆய்ந்தறிந்து செயல்பட்டால்
உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.
 

485.

காலங் கருதி இருப்பர் கலங்காது

ஞாலங் கருது பவர்.

 

கலக்கத்துக்கு   இடம்   தராமல்   உரிய  காலத்தை   எதிர்பார்த்துப்
பொறுமையாக    இருப்பவர்கள்   இந்த    உலகத்தையேகூட    வென்று
காட்டுவார்கள்.