பக்கம் எண் :

அரசியல்100கலைஞர் உரை

496.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.

 

ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் 'தேர் கடலிலே ஓடாது'
'கப்பல்  நிலத்தில்   போகாது'   என்பதையாவது   தெரிந்தவராக  இருக்க
வேண்டும்.
 

497.

அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை

எண்ணி யிடத்தாற் செயின்.

 

ஒரு   செயலுக்குரிய   வழி   முறைகளைக்  குறையின்றிச்  சிந்தித்துச்
செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.
 

498.

சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்.

 

சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால்
பெரிய படையை வென்று விட முடியும்.
 

499.

சிறைநலனுஞ் சீரும் இலரெனினும் மாந்தர்

உறைநிலத்தோ டொட்ட லரிது.

 

பாதுகாப்புக்கான   கோட்டையும், மற்றும் பல   படைச்   சிறப்புகளும்
இல்லாதிருப்பினும்,    அப்பகைவர்   வாழும்   நிலையான   இடத்திற்குப்
படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.
 

500.

காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு.

 

வேலேந்திய வீரர்களை  வீழ்த்துகின்ற  ஆற்றல்   படைத்த   யானை,
சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.