பக்கம் எண் :

அரசியல்102கலைஞர் உரை

506.

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி.

 

நெறியற்றவர்களை  ஒரு  பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள்
உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.
 

507.

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

பேதைமை எல்லாந் தரும்.

 

அறிவில்லாதவரை  அன்பு   காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை
மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.
 

508.

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும்.

 

ஆராய்ந்து   பார்க்காமல்    ஒருவரைத்  துணையாகத் தேர்வு செய்து,
அமர்த்திக்கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத
துன்பம் விளையும்.
 

509.

தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள்.

 

நன்கு  ஆராய்ந்து  தெளிந்த   பிறகு  ஒருவரிடம்  நம்பிக்கை வைக்க
வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக் கூடாது.
 

510.

தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.

 

ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து
தேர்வு செய்து ஏற்றுக்கொண்ட  பின்  அவரைச்  சந்தேகப்படுவதும் தீராத
துன்பத்தைத் தரும்.