பக்கம் எண் :

திருக்குறள்103பொருள்

52. தெரிந்து வினையாடல்
 

511.

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.

 

நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமே
நாட்டங்     கொண்டவர்கள்     எப்பணியினை   ஆற்றிடவும்    தகுதி
பெற்றவராவார்கள்.
 

512.

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை

ஆராய்வான் செய்க வினை.

 

வருமானம்  வரக்கூடிய  வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி,
இடையூறுகளையும்   ஆராய்ந்து    நீக்கிட    வல்லவனே  செயலாற்றும்
திறனுடையவன்.
 

513.

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு.

 

அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம்  ஆகிய
நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத்  தேர்வு  செய்வதே
நலம்.
 

514.

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.

 

எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும்
செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.
 

515.

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்

சிறந்தானென் றேவற்பாற் றன்று.

 

ஆய்ந்தறிந்து  செய்து  முடிக்கும்  ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல்
வேறோருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது.