பக்கம் எண் :

அரசியல்104கலைஞர் உரை

516.

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ

டெய்த உணர்ந்து செயல்.

 

செயலாற்ற  வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும்
ஆராய்ந்து, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்த வேண்டும்.
 

517.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்

ததனை அவன்கண் விடல்.

 

ஒரு காரியத்தை  ஒருவர்   எப்படிச்  செய்து   முடிப்பார்   என்பதை
ஆராய்ந்து பார்த்து,  அதற்குப்  பிறகு   அந்தக்  காரியத்தை   அவரிடம்
ஒப்படைக்க வேண்டும்.
 

518.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல்.

 

ஒரு  செயலில்  ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த
பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்.
 

519.

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்குந் திரு.

 

எடுத்த  காரியத்தை   முடிப்பதில்  கண்ணும் கருத்துமாக இருப்பவரின்
உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.
 

520.

நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு.

 

உழைப்போர்   உள்ளம்    வாடாமல்  இருக்கும்  வரையில்  உலகின்
செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு
நாளும் அரசினர் ஆய்ந்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.