பக்கம் எண் :

அரசியல்106கலைஞர் உரை

526.

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத் தில்.

 

பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை
விலக்கியவனாகவும் ஒருவன்  இருந்தால்  அவனைப்  போல்  சுற்றம்  சூழ
இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.
 

527.

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள.

 

தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக்
காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு   மட்டுமே  உலகில்
உயர்வு உண்டு.
 

528.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.

 

அனைத்து  மக்களும்  சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப
அவர்களைப்   பயன்படுத்திக்  கொண்டால்,  அந்த  அரசை அனைவரும்
அரணாகச் சூழ்ந்து நிற்பர்.
 

529.

தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்

காரண மின்றி வரும்.

 

உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள்,
அந்தக் காரணம் பொருந்தாது  என்று  உணரும்போது  மீண்டும்   உறவு
கொள்ள வருவார்கள்.
 

530.

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத்திருந் தெண்ணிக் கொளல்.

 

ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க
காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.