பக்கம் எண் :

திருக்குறள்111பொருள்

56. கொடுங்கோன்மை
 

551.

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்

டல்லவை செய்தொழுகும் வேந்து.

 

அறவழி  மீறிக்  குடிமக்களைத்    துன்புறுத்தும்  அரசு, கொலையைத்
தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
 

552.

வேலோடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு.

 

ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக்
காட்டிப்   பொருளைப்  பறிப்பது,  வேல்   ஏந்திய  கொள்ளைக்காரனின்
மிரட்டலைப் போன்றது.
 

553.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும்.

 

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து
அவற்றிற்குத் தக்கவாறு நடந்து   கொள்ளாத   அரசு   அமைந்த   நாடு
சீர்குலைந்து போய்விடும்.
 

554.

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.

 

நாட்டுநிலை   ஆராயாமல்   கொடுங்கோல்   புரியும்   அரசு    நிதி
ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.
 

555.

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.

 

கொடுமை   பொறுக்க  முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை
அழிக்கும் படைக்கருவியாகும்.